சீர்திருத்தப் பயிற்சி நிலையத்தில் முதல் முறையாக சந்தித்துக் கொண்ட மூவர், தற்போது சேர்ந்து சிறைத் தண்டனையை அனுபவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கிளார்க் கீயில் முன்பின் அறி முகமில்லாதவரை மூவரும் கும்பலாகச் சேர்ந்து தாக்கியுள்ளனர். மூவரில் ஒருவரான முஹமட் அமிருல் ஷஃபி அப்துல்லா, 23, மற்றொருவரைத் தாக்கிய குற்றத்தை நேற்று ஒப்புக்கொண்டார்.
அவருக்கு பத்து மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட ஜஸ்டின் சுவா யோங் ஜிக்கு $269,65 இழப்பீடாக வழங்கவும் அவருக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் அந்த தொகையை அவரால் கொடுக்க முடியாததால் கூடுதலாக மூன்று நாள் சிறைத் தண்டனையை அமிருல் அனுபவிக்க வேண்டும்.
மார்ச் 20ஆம் தேதியன்று அமிருல், டைட்டஸ் வோங் வெய் ஷி, 21, டேனி சுலாஸ்டிரி முஹமட் சலிம், 23, ஆகிய மூவரும் இரவு ஏழு மணியளவில் போட் கீ அருகே சர்க்கியுலர் சாலை மதுபானக் கூடத்துக்குச் சென்று பீர் அருந்தினர்.
குடித்துக்கொண்டே மூவரும் கிளார்க் கீக்கு அருகே மெர்ச்சண்ட் ரோட்டில் உள்ள ரிவர்சைட் பாய்ண்ட் கடைத்தொகுதி அருகே வந்தனர்.
அப்போது முன்பின் அறிமுகமில்லாத சுவாவை டைட்டஸும் அமிருலும் பின்பக்கமாகத் தாக்கினர். சத்தம் கேட்ட டேனியும் அவர்களுடன் சேர்ந்து அந்த நபரைத் தாக்கினார்.
அந்த நபர் தன்னை முறைத்ததாக அமிருல் நம்பினார்.
திரு சுவாவை கத்தியால் தாக்கி மூன்று முறை வெட்டியதாகவும் அமிருல் தெரிவித்திருந்தார். இதன் பிறகு மூவரும் ஓடிவிட்டனர்.
சுவாவுக்கு மண்டையோட்டில் காயம் ஏற்பட்டு சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிற்பகுதியில் அமிருலும் வோங்கும் கைது செய்யப் பட்டனர். அடுத்த மாதமே டேனியும் பிடிபட்டார்.
அடிக்கடி போதைப் பொருள் புழங்கும் வோங்குக்கு இவ்வாண்டு பிப்ரவரியில் ஐந்து ஆண்டு, எட்டு மாதச் சிறைத் தண்டனையும் மூன்று பிரம்படி களும் விதிக்கப்பட்டன.
டேனிக்கு கடந்த ஜனவரி மாதம் எட்டு மாதம், மூன்று வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

