லஞ்ச ஊழல் தொடர்பான புகார்கள் கடந்த ஆண்டில் குறைந்துள்ளன என்று லஞ்ச ஊழல் புலனாய்வு மன்றம் நேற்று தெரிவித்தது. 2022ல் அது 234 லஞ்ச ஊழல் தொடர்பான புகார்களை விசாரித்தது என்றும் 2021ல் அந்த எண்ணிக்கை 249 என்றும் மன்றம் தனது வருடாந்திர அறிக்கையில் கூறியது.
கடந்த ஆண்டு விசாரித்த 234 புகார்களில் 83 புதியன என்றும் 2021லும் அந்த எண்ணிக்கையிலான புகார்களைப் பெற்றதாகவும் அது குறிப்பிட்டது. இது, விகிதாசாரத்தில் 35%. அதற்கு முந்திய நான்கு ஆண்டுகளின் புகார்களைவிட சற்று அதிகம்.
தனக்குக் கிடைக்கும் தகவலின் உண்மைத்தன்மைக்கேற்ப ஒரு புகார் பதிவு செய்யப்படுகிறது என்று கூறிய மன்றம் இது பெறப்படும் தகவலின் நம்பகத்தன்மையைப் பொறுத்தது என்றது.
"சிங்கப்பூரில் லஞ்ச ஊழல் நிலைமை முற்றிலும் கட்டுக்குள் உள்ளது. நாங்கள் சமூகத்தில் எங்கள் பங்காளிகளின் முக்கிய பங்களிப்புகளை ஆழமாக மதிக்கிறோம். அதைக் கொண்டு லஞ்ச ஊழலை எதிர்க்கும் பொதுவான இலக்கை நோக்கி நடைபோடுகிறோம்.
"லஞ்ச ஊழலுக்கு எதிராக பொதுமக்கள் விழிப்புடன் இருப்பதற்கும் ஏதேனும் தவறு நேர்ந்தால் அதுபற்றி உடனடியாக புகாரளிப்பதற்கும் நாங்கள் நன்றிகூற கடமைப்பட்டிருக்கிறோம். ஒன்றுசேர்ந்து லஞ்ச ஊழலற்ற சிங்கப்பூரை உருவாக்கும் முயற்சியைத் தொடர்வோம்," என்று மன்றம் தனது அறிக்கையில் விவரித்தது.
லஞ்ச ஊழல் தொடர்பான தகவல் உள்ளவர்கள் எண் 2, லெங்கோக் பாருவிலுள்ள லஞ்ச ஊழல் புலனாய்வு மன்றத்தின் தலைமையகத்திற்கு தகவல் அளிப்பவரின் விவரங்களைக் குறிப்பிடாமல் கடிதம் அனுப்பலாம் அல்லது 1800-376-0000 எண்ணை அழைக்கலாம் அல்லது https://www.cpib.gov.sg/e-services/e-complaint-for-corrupt-conduct எனும் இணையப் பக்கம் மூலமாக மின்னியல் புகார் அளிக்கலாம் அல்லது report@cpib.gov.sg எனும் முகவரி மூலம் மின்னஞ்சல் அனுப்பலாம்.
பெயர் குறிப்பிடப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் தனக்குக் கிடைக்கும் அனைத்துப் புகார்களையும் தான் தீவிரமாக பரிசீலிக்கும் என்றும் மன்றம் சொன்னது.
கடந்த ஆண்டு கிடைக்கப்பெற்ற லஞ்ச ஊழல் தொடர்பான 234 புகார்களில் 100 அதாவது 43% புகாரளிப்பவரின் விவரங்கள் இல்லாமல் வந்தன. கடந்த ஆண்டு புலனாய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட 83 சம்பவங்களில் 13 அதாவது 16% பெயர் அளிக்க விரும்பாதவர்களிடம் இருந்து வந்தன.
லஞ்ச ஊழலுக்கு எதிரான தேசிய முயற்சிகள் கடந்த மூன்று ஆய்வுகளில் முன்னேற்றம் கண்டுள்ளதாக, ஈராண்டுக்கு ஒருமுறை லஞ்ச ஊழல் புலனாய்வு மன்றத்தால் நடத்தப்படும் பொதுக் கண்ணோட்ட கருத்தாய்வில் தெரியவந்தது.
ஈராண்டுக்கு ஒருமுறை லஞ்ச ஊழல் பற்றியும் லஞ்ச ஊழல் புலனாய்வு மன்றம் பற்றியும் கருத்தாய்வு நடத்த, மன்றம் ஒரு சுயேச்சையான ஆய்வு நிறுவனத்தின் சேவையை நாடுகிறது. அதன் தொடர்பில் சிங்கப்பூரின் மக்கள்தொகையைக் கருத்தில் கொண்டு கிட்டத்தட்ட 1,000 பேரிடம் கருத்துகள் சேகரிக்கப்பட்டன.
கடந்த ஆண்டு நடத்தப்பட் ஆய்வில் பங்கேற்றவர்களில் 96 விழுக்காட்டினர் சிங்கப்பூரில் லஞ்ச ஊழல் கட்டுப்பாட்டு முறைகள் சிறப்பாக, மிகச் சிறப்பாக, அற்புதமாக உள்ளது என்று கூறினர். இது 2020ல் 94 விழுக்காடாகவும் 2018ல் 92 விழுக்காடாகவும் 2016ல் 90 விழுக்காடாகவும் இருந்தது.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 89 விழுக்காட்டினர் லஞ்ச ஊழல் பற்றி புகாரளிக்க முன்வரும் மக்களின் பொறுப்புணர்ச்சியே லஞ்ச ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு முக்கியம் என்று கருத்துஉரைத்தனர்.

