அதிபர்: தேர்ச்சி அடிப்படையிலான வேலைகள் பற்றி இன்னமும் பொருத்தமில்லாத கருத்து
சிங்கப்பூரில் தொழில்நுட்பத் தேர்ச்சிகளுடன்கூடிய ஊழியர்களை அங்கீகரிக்க அதிக முயற்சிகள் இடம்பெறுகின்றன.
என்றாலும்கூட இதைப் பொறுத்தவரை சிங்கப்பூர் வேகமாக முன்னேற வேண்டிய தேவை இருக்கிறது என்று அதிபர் ஹலிமா யாக்கோப், தனது வருடாந்திர மே தினச் செய்தியில் வலியுறுத்திக் கூறினார்.
சுவிட்சர்லாந்து, ஜெர்மனி நாடுகளில் படிக்கும்போதே மாணவர்களுக்குத் தொழில்துறை பயிற்சிகளை நிறுவனங்கள் நேரடியாகக் கொடுக்கின்றன.
ஆகையால், அந்த நாடுகளில் தேர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட நல்ல வேலைகள் நடப்பில் உள்ளதாக அதிபர் கூறினார்.
"தொழில்நுட்பத் தேர்ச்சிகளைக் கொண்ட வேலைகள் முறையாக, உயர்வாக மதிக்கப்பட வேண்டும். பொருத்தமான வெகுமதி அளிக்கப்பட வேண்டும்.
"நல்ல ஊதியம் இல்லை எனில், வாழ்க்கைத் தொழில் மேம்பாட்டு வாய்ப்புகள் சரியில்லை எனில், அத்தகைய வேலைகள் ஏட்டுக் கல்வி வேலைகளைவிட தாழ்வாகக் கருதப்படும் எனில் விரும்பிய பலன் ஏற்படாது," என்று அதிபர் தெரிவித்தார்.
"தானியக்கமயம் காரணமாக வேலை பாணிகள் மாறுகின்றன. இப்போதெல்லாம் ஊழியர்கள் சிக்கலான வேலைகளைப் பார்க்க வேண்டி இருக்கிறது. இந்தச் சூழலில் ஏட்டுக் கல்வி தொழில் கல்வி என்று வேலைகளைப் பிரித்துப் பார்ப்பது விரயமான ஒன்று," என்று திருவாட்டி ஹலிமா கூறினார்.
தேர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட வேலைகளுக்கு அதிக முக்கியத்துவம் தேவை என்று வலியுறுத்திய அதிபர், தமது செய்தியில் இதர இரண்டு அம்சங்களைப் பற்றியும் குறிப்பிட்டார்.
தொழிற்சங்கங்கள் ஆற்றும் பணிகள் பற்றி குறிப்பிட்ட அதிபர், வேலை இடங்களில் நியாயமான நடைமுறை இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அந்தச் சங்கங்கள், ஊழியர்களை வலுவாக தொடர்ந்து பிரதிநிதித்து வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
உற்பத்தித்திறன் உயர்வுக்கு ஏற்ற சம்பளமும் அதிகரிக்கும் படிப்படியான சம்பள உயர்வு முறை மேலும் பல துறைகளை உள்ளடக்க வேண்டும் என்றும் அதிபர் வலியுறுத்தினார்.
கொவிட்-19 காரணமாக ஏற்பட்ட பொருளியல் சவால்களையும் உக்ரேன் போரையும் கவனத்தில் கொண்டுள்ள சிங்கப்பூர், நல்லிணக்கம் மிகுந்த தொழிலாளர்-முதலாளி உறவைத் தொடர்ந்து கொண்டிருப்பபதாக அதிபர் தெரிவித்தார்.
வலுவான முத்தரப்பு உறவுதான் அந்த நல்லிணக்கத்திற்குக் காரணம் என்று அதிபர் குறிப்பிட்டார்.
தொடக்ககால சிரமங்களை எப்படி எல்லாம் நாம் சமாளித்து வந்து இருக்கிறோம் என்பதை மே தினம் நினைவூட்டுவதாகக் குறிப்பிட்ட அதிபர், ஐக்கியமும் உறுதியும்தான் நம் வெற்றிக்கான முக்கிய காரணங்கள் என்று தெரிவித்தார்.

