தேசிய பூங்காக் கழகம், பூங்காக்களையும் வீதிகளின் பசுமை வளங்களையும் நிர்வகிக்க புதிய பாணியைத் தொடங்கியுள்ளது. பீஷான்-அங் மோ கியோவில் முதன்முதலாக அது தொடங்கும்.
முழு துறையையும் உள்ளடக்கி பசுமை நிர்வாகத்தில் மேம்பாட்டைச் சாதிப்பது அந்தப் புதிய பாணியின் நோக்கம்.
மின்னிலக்க கருவிகள், உணர்வுச் சாதனங்கள் ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்தி கழகம் இதைச் செய்யும்.
தாவரங்களில் உள்ள குறைபாடுகளை, நோய்களைக் கண்டுபிடிக்கும் அதிநவீன சாதனங்களைக்கொண்டு தொலைதூரத்தில் இருந்து மரங்களை மெய்நிகர் ரீதியில் பரிசோதிப்பது இதில் அடங்கும். பழைய மரங்களை மேலே சென்று பரிசோதிக்க போதிய ஊழியர் வளம் இருப்பது இதன் மூலம் உறுதி செய்யப்படும்.
மின்னிலக்க கருவிகள், உணர்வுச் சாதனங்கள் மூலம் திரட்டப்படும் தகவல்கள் 'மாவென் 2' என்ற மத்திய முறையில் சேகரிக்கப்படும்.
அந்த முறையை நிலவனப்பு நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டு முக்கியமான தகவல்களைப் பெறலாம்.
அவை தங்கள் பணி நடைமுறைகளை மின்னிலக்கமயமாக்கலாம். இந்தப் புதிய பாணி ஏற்பாடு, ஒப்பந்தப்புள்ளி மூலம் பீஷான்-அங் மோ கியோ மாவட்டத்தில் முதன்முதலாக அமலாகும் என்று நேற்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார்.
இதேபோன்ற ஒப்பந்தங்கள் மூலம் சிங்கப்பூரின் இதர பகுதிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்த அமைச்சர், இந்தப் புதிய பாணி மூலம் பூங்காக் கழகம் அதிநவீன மின்னிலக்க தொழில்நுட்ப ஆற்றல்களை இத்தொழில்துறையின் எஞ்சிய பகுதிகளுக்கும் காலப்போக்கில் மாற்றிவிட முடியும் என்று கூறினார்.
நிறுவனங்கள் உற்பத்தித்திறனை மேம்படுத்தி தங்கள் செயல்முறையை நவீனப்படுத்த உதவுவது இதன் நோக்கம். அப்படிச் செய்வதன் மூலம் இந்தத் தொழில்துறைக்குப் பலரையும் கவர்ந்து ஈர்த்து அவர்களுக்குப் பயிற்சி அளிப்பதும் நோக்கம்.
சிங்கப்பூர் நில வடிவமைப்பு தொழில்துறை சங்கம் ஏற்பாட்டில் நடந்த பசுமை நிகழ்ச்சி ஒன்றின் நான்காவது நாளன்று அமைச்சர் உரையாற்றினார்.
இந்தத் துறையில் மின்னிலக்கமயத்திற்கு ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக கழகம் நேற்று புதிய $7.5 மில்லியன் மானியத்தை அறிவித்தது.
நிலவனப்பு, விலங்கு தொழில்துறைகளில் தொழில்நுட்ப முறைகளை உள்ளடக்கவும் உற்பத்தித்திறனைப் பெருக்கவும் நிறுவனங்களுக்கு அந்த நிதி ஆதரவு அளிக்கும்.
'நிலவனப்பு விலங்கு துறை, உற்பத்தித்திறன் மானியம்' என்ற அந்த நிதி, நிறுவனங்கள், புத்தாக்க சாதனங்களை வாங்குவதற்கு ஆகும் செலவை ஈடுசெய்ய பயன்படும்.

