கருணாநிதி துர்கா
கடந்த மூன்று ஆண்டுகளாக சிங்கப்பூரர்கள் கொவிட்-19 நோய்ப் பரவலை எதிர்த்து வரும் காலகட்டத்தில் சமூக, அடித்தள தொண்டூழியர்கள் தங்களது முழு முயற்சியையும் அர்ப்பணிப்பையும் கொடுத்துள்ளனர்.
அவர்களின் கடின உழைப்பை அங்கீகரிக்கும் நோக்கத்துடன் ஏப்ரல் 30ஆம் தேதியன்று புக்கிட் பாஞ்சாங் சமூக மன்றத்தில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
370க்கும் மேற்பட்ட அடித்தள தலைவர்கள், சமூகத் தொண்டூழியர்கள், ஊழியர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்குப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. கொவிட்-19 நோய்ப் பரவலினால் உலகம் முழுக்க கடுமையான சமூக, பொருளியல் இடையூறுகள் ஏற்பட்டன.
விநியோக இடையூறுகளினாலும் மக்கள் பதற்றத்தினால் அளவுக்கு அதிகமான பொருள்களை வாங்கியதாலும் உலகளவில் பொருளியல் மந்தநிலையும் விநியோக பற்றாக்குறையும் ஏற்பட்டது.
அதுமட்டுமல்லாமல், 2020யிலும் 2021யிலும் பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
அக்காலகட்டத்தில் பல்வேறு கொவிட்-19 இயக்கங்களில் புக்கிட் பாஞ்சாங் அடித்தள, சமூக தொண்டூழியர்கள் முக்கிய பங்கு வகித்தனர்.
முகக்கவசங்களையும் டிரேஸ்டுகெதர் சாதனங்களையும் குடியிருப்பாளர்களுக்கு விநியோகிப்பதில் இவர்கள் ஈடுபட்டிருந்தனர். அதுமட்டுமல்லாமல், பல தொண்டூழியர்கள் கொவிட்-19 தடுப்பூசி மையங்களில் உதவி செய்ததோடு மக்களுக்குத் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
"சமூகத்திற்குப் பங்காற்றிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். நாம் தொடர்ந்து ஒற்றுமையுணர்ச்சியுடன் ஒருவருக்கொருவர் கைகொடுக்க வேண்டும்," என்று புக்கிட் பாஞ்சாங் அடித்தள அமைப்புகளின் ஆலோசகரான திரு லியாங் எங் ஹுவா கூறினார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தின் நிர்வாக இயக்குநரான பேராசிரியர் லியோ யீ சின்னுடன் ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
"கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக நான் தொண்டூழிய சேவையில் ஈடுபட்டுள்ளேன். சிறு வயதில் என் தாயார் பல பிள்ளைகளுக்கு இசை, நடனம் என பல கலைகளைக் கற்றுக்கொடுப்பதுண்டு. இதைப் பார்த்து எனக்கும் பிறருக்கு உதவ வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் உதித்தது," என்று புக்கிட் பாஞ்சாங் சமூக மன்ற இந்தியர் நற்பணி செயற்குழுவின் தலைவரான திருமதி ராமா பிபிஎம், 82, கூறினார்.
விருது வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டவர்களுள் இவரும் ஒருவர். அரசாங்கம் பல ஆதரவுத் திட்டங்களை அறிமுகப்படுத்தினால் நாமும் ஒரு சமூகமாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார் இவர்.

