வீடமைப்பு வளர்ச்சிக் கழக குடியிருப்பாளர்களுக்கான சேவை, பராமரிப்புக் கட்டணம் அதிகரிக்கக்கூடும். இருப்பினும், இந்தக் கட்டண ஏற்றத்தால் ஏற்படும் தாக்கத்திலிருந்து குடியிருப்பாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் அரசாங்கம் தற்காலிக ஆதரவு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேவை, பராமரிப்புக் கட்டணத்தை எந்த அளவுக்கு உயர்த்தினால் நியாயமானதாக இருக்கும் என்பது குறித்து நகர மன்றங்கள் தற்போது ஆராய்ந்து வருகின்றன. கூடிய விரைவில் இதுதொடர்பான விவரங்கள் வெளியிடப்படும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் மக்கள் செயல் கட்சியின்கீழ் இயங்கும் நகர மன்றங்களின் ஒருங்கிணைப்புத் தலைவர் லிம் பியோ சுவான் கூறினார்.
சேவை, பராமரிப்புக் கட்டணம் ஆக கடைசியாக 2017ஆம் ஆண்டில் உயர்த்தப்பட்டது. கட்டணம் $1லிருந்து $17 வரை ஏற்றம் கண்டது. கட்டண உயர்வு இரண்டு ஆண்டுகளில் படிப்படியாக நடப்புக்கு வந்தது.
சேவை, பராமரிப்புக் கட்டணம் மூலம் வசூலிக்கப்படும் தொகை குடியிருப்புப் பேட்டைகளைச் சுத்தம் செய்வதற்காகவும், நிலவனப்புப் பணிகளுக்காகவும் குப்பைகளை அகற்றுவதற்காகவும் இயந்திரங்கள் மற்றும் மின்சாரக் கருவிகளைப் பராமரிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. கட்டணங்கள் உயர்த்தப்பட்டதும் குடியிருப்பாளர்களுக்கு உதவும் வகையில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குச் சிறப்பு ஆதரவுத் தொகை வழங்கப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாகத் தெரிவித்தார்.
கடந்த மாதம் 21ஆம் தேதியன்று புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை கேட்ட கேள்விக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அமைச்சர் லீயின் பதில் அமைந்தது.
எரிசக்தி விலைகள், பராமரிப்புச் செலவினங்கள், மனிதவளச் செலவினங்கள் ஆகியவை அதிகரித்திருப்பதாலும் அதனால் நகர மனறங்களுகக்குக் கூடுதல் செலவுகள் ஏற்படுவதாகவும் திரு லிம் கூறினார். 2018ஆம் ஆண்டுக்கும் இவ்வாண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் எரிசக்தி விலைகள் 23 விழுக்காடு அதிகரித்திருப்பதை அவர் சுட்டினார்.

