சிறந்தவர்களாக, நம்பிக்கையுடன் தொடர்ந்து வெல்ல துணைப் பிரதமர் அறைகூவல்
உலகப் பொருளியல் சூழ்நிலை சரியில்லை. இந்தச் சூழலில் சிங்கப்பூர் தனக்கே உரிய சிறப்பு அம்சங்களுடன் தொடர்ந்து திகழ்ந்து உலகைக் கவர வேண்டும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் வலியுறுத்திக் கூறி இருக்கிறார்.
"மற்றவர்களைவிட சிங்கப்பூரர்கள் கடும் உழைப்பாளிகளாக, விவேகமிக்கவர்களாகத் தொடர்ந்து திகழ வேண்டும்.
"பெரும்பாலானவர்களைவிட நாம் சிறந்தவர்கள். சிங்கப்பூரை எப்போதுமே நம்பலாம் என்ற சிறப்பு இயல்புகளுடன் நாம் தொடர்ந்து திகழ்ந்து வர வேண்டும்," என்று அவர் கூறினார்.
"பொருளியலைக் கருமேகங்கள் சூழ்ந்து இருந்தாலும் ஒருபோதும் நாம் அச்சமடையக் கூடாது. நம்பிக்கையை விட்டுவிடக்கூடாது. சிங்கப்பூர் சிறிய நாடாக இருக்கலாம். ஆனால், அந்தச் சிறிய நாடு முன் ஒருபோதும் இல்லாத அளவுக்கு இப்போது பிரகாசமாக ஒளிவிட்டு வருகிறது," என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
"சிங்கப்பூர் தன்னுடைய ஆற்றல்களிலும் பலத்திலும் தொடர்ந்து ஒருமித்த கவனத்தைச் செலுத்தி வந்தால், உலகத்திற்கு நன்மை தரக்கூடிய வழிகளை அது கண்டு வந்தால் சிங்கப்பூர் நல்ல வாழ்வை, செழிப்பை அனுபவிக்கும்," என்று திரு வோங் குறிப்பிட்டார்.
"உலகம் ஆபத்துமிக்கதாகவும் தொல்லைமிக்கதாகவும் ஆகி வருகிறது. இந்தச் சூழலில் தன்னுடைய பொருளியலை வளர்ச்சியடையச் செய்வதும் வேலைகளை உருவாக்குவதும் சிங்கப்பூருக்கு சிரமமானதாகவே இருக்கும்," என்று அவர் தெரிவித்தார்.
"வர்த்தக விதிமுறைகள் மாறுகின்றன. புவிசார் அரசியல் நிலவரங்கள் மாற்றம் அடைகின்றன. அவை காரணமாக முதலீடுகளின் போக்கு மாறுகிறது. முன்னேறிய பொருளியலைக் கொண்ட நாடுகள் அதிக மானியங்களைக் கொடுத்து முக்கியமான நிறுவனங்களைத் தக்கவைத்துக் கொள்ள முயல்கின்றன.
"இவற்றின் விளைவாக முதலீடுகளைக் கவர்வதற்கான போட்டி மிகக் கடுமையானதாக ஆகிவிடும்.
"இருந்தாலும் கெட்டிக்காரத்தனம், புத்தாக்கம் ஆகியவற்றோடும் துணிச்சல், விடாமுயற்சியோடும் கூடிய சிங்கப்பூர் எவ்வளவு சிரமங்களையும் சமாளித்து முன்னேறும்," என்று மே தினப் பேரணியில் துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.
"சிங்கப்பூர் கடந்த காலத்தில் மிகப் பெரிய சவால்களை எல்லாம் கடந்து வந்திருக்கிறது. அந்தச் சாதனைகளை அது தொடரும்," என்றும் திரு வோங் தெரிவித்தார்.
சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு, கண்காட்சி மையத்தில் தொழிற்சங்கவாதிகள், ஊழியர்களிடையே உரையாற்றிய திரு வோங், பொருளியல் எதிர்நோக்கும் சிரமமான சூழ்நிலைகளை விளக்கினார்.
வர்த்தகத்தைப் பொறுத்தவரை நாடுகள் இனிமேல் அனைவருக்கும் வெற்றி என்ற அடிப்படையிலான ஒத்துழைப்பை நோக்கி செயல்பட இயலாது என்று அவர் குறிப்பிட்டார்.
புவிசார் அரசியல் நிலவரங்கள் காரணமாக உலக முதலீடுகள் வரத்து மெதுவடையும் என்று அவர் கூறினார்.
கணினிச் சில்லுகள், பசுமை எரிசக்தி போன்ற முக்கியமான தொழில்துறைகளில் உள்நாட்டு உற்பத்தி ஆற்றலைப் பலப்படுத்தும் வகையில் முன்னேறிய நாடுகள் நிறுவனங்களுக்கு அதிக அளவில் மானியங்களை வழங்கத் தொடங்கி இருக்கின்றன என்பதை அவர் சுட்டினார்.
"கொவிட்-19 சூழ்நிலை காரணமாக உலகளவில் சிங்கப்பூரின் நற்பெயர் மேம்பட்டு இருக்கிறது. தொழில் நடத்துவதற்கு நம்பத்தகுந்த ஓர் இடமாக சிங்கப்பூர் கருதப்படுகிறது.
"இந்த வாய்ப்பை சிங்கப்பூர் நன்கு பயன்படுத்திக்கொண்டு இன்னும் போட்டித்திறன் வாய்ந்த நாடாக அது திகழ வேண்டும். அதோடு, உலகிற்கு ஏற்ற ஒரு நாடாகவும் தொடர்ந்து இருந்து வரவேண்டும்," என்று நிதி அமைச்சருமான திரு வோங் வலியுறுத்தினார்.
சாங்கி முனையம் 5, துவாஸ் துறைமுகம் போன்ற உள்கட்டமைப்பு இணைப்பு வசதிகளில் தொடர்ந்து முதலீடு செய்வது நம்முடைய உத்தி என்றும் அவர் குறிப்பிட்டார்.
புத்தாக்கத்திற்கான சிங்கப்பூரின் ஆற்றல்களைப் பலப்படுத்துவது மற்றோர் உத்தி என்றாரவர்.

