டிபிஎஸ் வங்கி பிப்ரவரி 10ஆம் தேதி 5 மில்லியன் உணவங்காடி உணவு மானியத் திட்டத்தைத் தொடங்கியது. அது முதல் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட உணவு மானியங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த வங்கி நேற்று தெரிவித்தது.
உணவைப் பெற்றுக்கொண்டோரில் 12 விழுக்காட்டினர் முதியோர். 24 விழுக்காட்டினர் மாதம் $2,500க்கும் குறைவாகச் சம்பாதிப்பவர்கள்.
உணவங்காடிக் கடைகளில் 'பேலா!' செயலியைப் பயன்படுத்தியுள்ள 62 வயதுக்கும் மேற்பட்ட முதியோரின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்து இருக்கிறது என்றும் இந்த உணவு மானியத் திட்டத்திற்கு பேராதரவு கிடைத்து வருகிறது என்றும் டிபிஎஸ் வங்கி குறிப்பிட்டது.
பணவீக்கம் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ள மக்களின் சாப்பாட்டுச் செலவை ஓரளவு ஈடுகட்டுவது இந்தத் திட்டத்தின் நோக்கம்.
டிபிஎஸ் வங்கியின் பேலா! செயலியைப் பயன்படுத்தி பணம் செலுத்துவோருக்கு $3 கழிவுத் தொகையாக திரும்பக் கிடைக்கும்.
அந்தச் செயலியை சிங்கப்பூர் முழுவதும் செயல்படும் SGQR என்ற குறியீட்டைப் பயன்படுத்தும் 11,600க்கும் மேற்பட்ட உணவங்காடிக் கடைகளில் பயன்படுத்தலாம்.
இந்த அனுகூலம் அடுத்த ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முதலாவதாக உணவு வாங்கும் 100,000 பேருக்குக் கிட்டும்.
இந்தத் திட்டத்தின் மூலம் உணவங்காடிக் கடைகளுக்கு வியாபாரம் அதிகரித்து இருக்கிறது. தங்களுடைய வாராந்திர வருவாய் 15% முதல் 25% வரை கூடியிருப்பதாக சில கடைக்காரர்கள் தெரிவித்தனர்.

