மருத்துவமனையில் இருக்கும்போது திரு ஹோங் காவ், தன்னால் அங்கிருக்க முடியாது. விரைவில் வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு தொந்தரவு செய்வார்.
"எனது தந்தையார் பலவீனமாக இருந்தாலும் தெளிவான நினைவுடையவராக இருந்தார். கடந்த ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி அவர் தனது தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கவில்லை என்ற காரணத்தால் நாங்கள் அவரை அவசர மருத்துவ வண்டி மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம்.
"அங்கு சென்றபோது அவரது இதயத்துடிப்பு நின்றுவிட்டது என்று குறிப்பிட்ட மருத்துவர்கள் அவரை இதய இயக்க மீட்பு சிகிச்சை மூலம் இதயத்துடிப்பை மீண்டும் இயங்க வைத்தனர்," என்றார் அவரது 46 வயது மகள் ஹோங் போ கோர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த தந்தையின் சுயநினைவு திரும்பாத நிலையில், வீட்டில் தனது விருப்பமான சாய்வு நாற்காலியில் அமர்ந்தவாறே உயிர்விட வேண்டும் என்ற அவரது கடைசி ஆசையை நிறைவேற்ற அவரது குடும்பம் முடிவு செய்தது.
அடுத்த இரண்டு நாள்களில் அவர் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டார். இங் டெங் ஃபோங் மருத்துவமனையின் 'ஐஎம்கோயிங்ஹோம்' திட்டத்தின்கீழ் வீட்டுக்குக் கொண்டு வந்து ஒன்றரை மணிநேரத்துக்குள் 83 வயது திரு ஹோங் தனது சாய்வு நாற்காலியில் சாய்ந்தவாறே உயிர் நீத்தார். அப்போது அவரது குடும்பத்தினர் அனைவரும் உடன் இருந்தனர்.
'ஐஎம்கோயிங்ஹோம்' திட்டத்தின்கீழ் இதுவரை ஆறு நோயாளிகள் தங்கள் வீட்டிலேயே உயிர்விடும் கடைசி ஆசை நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் இந்தத் திட்டத்தை தற்போது நடைமுறைப்படுத்தும் ஒரே மருத்துவமனையாகத் திகழும் இங் டெங் ஃபோங் மருத்துவ மனை, எதிர்காலத்தில் இதை ஒரு வழக்கமான நடைமுறையாக மேற்கொள்ள எண்ணியுள்ளது.

