மண்டாயில் புதிதாக உருவாக்கப் பட்டுள்ள பேர்ட் பாரடைஸ் எனப்படும் பறவை மகிழ்வனம் வரும் திங்கட்கிழமை திறக்கப்படுவதால் இதற்கு முன்னர் ஜூரோங் பறவைப் பூங்காவில் இருந்த 32 பென்குவின் பறவைகள் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டு உள்ளன.
அவை 7 மீட்டர் ஆழத்திற்கு முக்குளித்து மேலெழும்புவதற்கு ஏதுவாக கண்ணாடிக்கூண்டுகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
இடமாற்றம் செய்யப்பட்டவைகளில் 12 ராஜ வகையைச் சேர்ந்த பென்குவின்கள்.
ஏப்ரல் 28ஆம் தேதி இவை அனைத்தும் ஏற்கெனவே மூடப்பட்ட ஜூரோங் பறவைப் பூங்காவிலிருந்து மண்டாய் பறவை மகிழ்வனத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டன. ஐஸ் கட்டிகளுட னான கூண்டுகளில் வைக்கப் பட்ட பென்குவின்கள் 12 டிகிரி செல்சியஸ் குளிரூட்டி உள்ள லாரிகள் மூலம் மண்டாய்க்குக் கொண்டு செல்லப்பட்டன.
இவற்றில் ஜெண்டூஸ் வகையைச் சேர்ந்த 11 பென்குவின்களில் 8 நெதர்லாந்தில் இருந்து பிப்ரவரி 1ஆம் தேதி ஜூரோங் பறவைப் பூங்காவுக்குக் கொண்டு வரப்பட்டன.
அவை முழுக்க முழுக்க பறவைப் பூங்காவுக்குப் புதிது என்பதாலும் ஏற்கெனவே அங்கு இருந்த பென்குவின்களோடு இணக்கத்தை ஏற்படுத்தும் வரை தனித்து வைக்கப்பட்டு இருந்தன. மேலும், மனிதத் தொடர்புகளுக்குப் பழக்கமில்லாதவையாக அவை இருந்ததாலும் தனியாக வைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
இவ்வாண்டு ஜனவரி மாதம் ஜூரோங் பறவைப் பூங்கா மூடப்பட்டது. அங்கிருந்த 3,500 பறவைகள் புதிய மண்டாய் பறவை மகிழ்வனத்துக்கு மாற்றும் பணி கட்டம் கட்டமாக நடந்து வந்தது. இறுதிக்கட்டமாக பென்குவின்கள் இடமாற்றம் செய்யப்பட்டன.
புதிய இடம் பென்குவின்களுக்கு ஏற்ற சூழலை ஏற்படுத்த போதுமான கால அவகாசம் தேவைப்பட்டதால் இறுதியாக அவை இடமாற்றம் செய்யப்பட்டதாக மண்டாய் வனவிலங்குக் குழுமத்தின் விலங்கு பராமரிப்புப் பிரிவு அதிகாரி திருவாட்டி ஏனைஸ் டிரிட்டோ கூறினார்.
அண்டார்டிகா துணைக் கண்ட தீவுகளில் இரவு, பகல் மாறுவதைப் போல காட்டும் விளக்கொளிகள் பென்குவின் கூண்டுகளில் அமைக்கப்பட்டு உள்ளன.
காலநேரத்திற்கு ஏற்ப தங்களது உடல்நிலையைச் சரிப்படுத்திக்கொள்ள அவற்றிற்கு இந்த ஏற்பாடு கைகொடுக்கும். மேலும், உறைய வைக்கப்பட்ட மீன்களை அவற்றுக்கு உணவாக வழங்குவதற்கான உணவூட்டும் கருவிகளும் நீருக்கடியில் பொருத்தப்பட்டு உள்ளன.
நீருக்குள் மூழ்கி விளையாடவும் இரைதேடவும் அவற்றுக்கு இதனால் வசதி ஏற்படும்.
ஜூரோங் பறவைப் பூங்காவில் நல்ல தண்ணீரில் வைக்கப்பட்டிருந்த பென்குவின்களுக்கு உப்பு நீர் சூழலில் வாழும் தன்மையை ஏற்படுத்த அவை அன்றாடம் உண்ணும் மீன்களில் உப்பு மாத்திரைகள் திணிக்கப்பட்டதாக மண்டாய் விலங்கு பராமரிப்பாளர் நூரல்யான்டி ஜேஸ்னி தெரிவித்தார்.

