டிபிஎஸ் வங்கிக் குழுமம் இவ்வாண்டின் முதலாம் காலாண்டில் சாதனை அளவாக $2.57 பில்லியன் நிகர லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டின் முதலாம் காலாண்டைக் காட்டிலும் இது 43 விழுக்காடு அதிகம்.
மேலும் 'ரிஃ பினிட்டி' ஆய்வில், இதன் லாபம் $2.01 பில்லியனாக இருக்கும் என்று பகுப்பாய்வாளர்கள் முன்னுரைத்ததைக் காட்டிலும் அதிக லாபத்தை டிபிஎஸ் பதிவு செய்துள்ளது.
மற்றொரு முன்னணி வங்கியான யுஓபி கடந்த வாரம் $1.5 பில்லியன் நிகர லாபம் ஈட்டியதாக அறிவித்தது.
கடந்த ஆண்டைக் காட்டிலும் 67 விழுக்காடு அதிக லாபத்தை அந்த வங்கி பதிவு செய்தது.
ஓசிபிசி வங்கி மே 10ஆம் தேதி தனது வருவாய் அறிக்கையை வெளியிட உள்ளது.
இதற்கிடையே, சில ஏற்றத்தாழ்வுகள் வந்துபோனாலும் வர்த்தக நிலவரம் தொடர்ந்து ஆரோக்கியமான அளவில் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக டிபிஎஸ் வங்கிக் குழுமத்தின் தலைமை நிர்வாகி பியுஷ் குப்தா நேற்று கூறினார்.
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வங்கித்துறை வீழ்ச்சியைச் சந்தித்து வரும் நிலையில், டிபிஎஸ் வங்கி பாதுகாப்பு மிக்கதாகத் தொடருவதால் வங்கியில் மேற்கொள்ளப்படும் வைப்புத்தொகையின் அளவு 4 விழுக்காடு அல்லது $20 பில்லியன் அதிகரித்துள்ளது என்றார் அவர்.
மார்ச் மாதம் புதிதாக வங்கியில் மேற்கொள்ளப்பட்ட பணப்பரிவர்த்தனை $3.6 பில்லியன் என்று இரட்டிப்பானது. கடந்த ஆண்டில் சராசரி மாத பரிவர்த்தனை $2 பில்லியன் என்ற அளவிலேயே இருந்தது.

