சூதாட்டம், இதர செலவுகள் காரணமாக $1 மில்லியன் கடன்சுமைக்கு ஆளான பொருள் சேமிப்புக்கிடங்கு மேற்பார்வையாளர் ஒருவர், கிட்டத்தட்ட $700,000 மதிப்பிலான எஸ்கே-II அழகு பராமரிப்புப் பொருள்களைக் கையாடி இருவரிடம் அவற்றை விற்றார்.
இணையப் பொருள் விற்பனையாளர்களான அந்த இருவரிடம் இருந்து $250,000 தொகையை ஃபூ யூ ஆன், 50, பெற்றுக்கொண்டார். நீதிமன்ற ஆவணங்களில் அவர்கள் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.
நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டை ஃபூ ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, நேற்று அவருக்கு நான்கு ஆண்டு, ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றம் புரிந்தபோது, லக்ஷரி வெஞ்சர்ஸ் (பியூட்டி) எனும் நிறுவனத்துக்காக ஃபூ பணியாற்றினார். செந்தோசா கேட்வேயில் பணியமர்த்தப்பட்ட அவர், விநியோகிப்பாளர்களிடம் இருந்து பொருள்களைப் பெற்றுக்கொள்ளும் பொறுப்பை வகித்தார். பின்னர் அவற்றைக் கடைகளுக்கு அவர் அனுப்பி வைப்பார்.
சூதாட்டம், இதர நடவடிக்கைகளில் பணத்தை இழந்த பிறகு, 2022 செப்டம்பரில் ஃபூ $1 மில்லியன் வாங்கியதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் லிம் யூ ஹுவெய் நீதிமன்றத்தில் கூறினார்.
கடனை அடைக்க, பொருள் சேமிப்புக்கிடங்கில் இருந்த சில பொருள்களைக் கையாடி அவற்றை லாபத்திற்கு விற்க திட்டம் தீட்டினார்.
இணையத்தில் அழகு பராமரிப்புப் பொருள்களை விற்கும் இருவரைத் தொடர்புகொண்ட ஃபூ, எஸ்கே-II பொருள்களை வாங்கிக்கொள்ள விருப்பமா எனக் கேட்டார். ரொக்கம் மற்றும் வங்கிக் கணக்கிற்குப் பணத்தை மாற்றிவிடுவதன் மூலம் அந்தப்பொருள்களை வாங்கிக்கொள்ள அவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
2022 செப்டம்பருக்கும் நவம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில், குறைந்தது இரு தருணங்களில் பொருள் சேமிப்புக்கிடங்கில் இருந்த கிட்டத்தட்ட $700,000 மதிப்பிலான எஸ்கே-II பொருள்களை ஃபூ கையாடினார்.
அந்த இருவரிடமிருந்து $150,000 முதல் $250,000 வரை தாம் பெற்றுக்கொண்டதை ஃபூ ஒப்புக்கொண்டார்.
அப்பொருள்களை அவர்களிடம் ஒப்படைப்பதற்குள் ஃபூ கைது செய்யப்பட்டுவிட்டதாக வழக்கறிஞர் லிம் தெரிவித்தார்.
சேமிப்புக்கிடங்கிற்குச் சென்று அங்குள்ள பெட்டிகளில் சில எஸ்கே-II பொருள்கள் இல்லாததை உதவி மேலாளர் கவனித்ததைத் தொடர்ந்து ஃபூவின் குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்தன.
சேமிப்புக்கிடங்கிற்கு வருவதற்கு முன் அப்பெட்டிகள் காலியாக இருந்தனவா என ஃபூவிடம் அந்த உதவி மேலாளர் கேட்டார். ஆனால், ஃபூ அதற்குப் பதில் அளிக்கவில்லை.
பின்னர் பொது மேலாளரை அந்த உதவி மேலாளர் தொடர்புகொண்டார். அந்தப் பொது மேலாளர் ஃபூவை எதிர்கொண்டதைத் தொடர்ந்து, ஃபூ குற்றங்களை ஒப்புக்கொண்டார். 2022 நவம்பர் 17ஆம் தேதி காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
ஃபூ கையாடிய பொருள்கள் அவரிடமிருந்து திரும்பப் பெறப்பட்டுவிட்டனவா என்பது பற்றி நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.
நம்பிக்கை மோசடி புரிந்த குற்றத்திற்காக அவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டு இருக்கலாம்.

