பிரதமர் லீ சியன் லூங்கும் ஜப்பானியப் பிரதமர் ஃபூமியோ கிஷிடாவும் நேற்று சிங்கப்பூரில் சந்தித்தனர்.
இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட அருமையான, நீண்டகால உறவை இரு தலைவர்களும் மறுஉறுதிப்படுத்தினர்.
ஜப்பானியப் பிரதமர், நான்கு நாள் ஆப்பிரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய வழியில் சிங்கப்பூருக்கு வந்தார். அவருக்குப் பிரதமர் லீ விருந்து அளித்துச் சிறப்பித்தார்.
பொருளியல், மின்னிலக்கமயம், எரிசக்தி, சுற்றுச்சூழல் போன்ற பரஸ்பர நலனுக்கான துறைகளில் தங்கள் நாடுகள் மேலும் எப்படி ஒத்துழைக்கலாம் என்பது பற்றி இரு தலைவர்களும் விவாதித்ததாக வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
வட்டார, அனைத்துலக நிலவரங்கள் பற்றிய கருத்துகளை இரு தலைவர்களும் பரிமாறிக்கொண்டனர்.
விதிகளை அடிப்படையாகக் கொண்ட உலக ஒழுங்கு முறை கட்டிக்காக்கப்பட வேண்டியதன் முக்கியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர். ஜப்பானிய பிரதமர் நேற்று தாயகம் புறப்பட்டுச் சென்றார்.

