தமிழில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான ‘சொற்போர்’ விவாதப் போட்டியில் தெக் வாய் தொடக்கப்பள்ளிக் குழு வெற்றிவாகை சூடியது.
எட்டாவது ஆண்டாக நடத்தப்பட்ட சொற்போர், 22 பள்ளிகளைச் சேர்ந்த 88 மாணவர்களுடன் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 29ஆம் தேதியன்று உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்தேறிய இறுதிச்சுற்றில் தெக் வாய் தொடக்கப்பள்ளியுடன் மேரிமவுண்ட் கான்வெண்ட் பள்ளி மோதியது.
மாணவர்களின் தமிழ்ப் பேச்சாற்றல், தன்னம்பிக்கை, சிந்தனையாற்றல் ஆகியவற்றை வளர்க்கவேண்டி தமிழர் பேரவை இந்த விவாதப் போட்டியை ஈராண்டுக்கு ஒருமுறை ஏற்பாடு செய்துவருகிறது.
தமிழ்மொழி விழாவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு வளர்தமிழ் இயக்கம், தமிழ்மொழிக் கற்றல் வளர்ச்சிக் குழுவும் ஆதரவு அளித்தன.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்மொழி கற்றல் வளரச்சிக் குழுவின் தலைவருமான திரு விக்ரம் நாயர் வருகை புரிந்திருந்தார்.
தயாரித்துப் பேசும் சுற்று, தயாரிப்பின்றி உடனுக்குடன் தலைப்பை அணுகிப் புரிந்து கருத்துகள் சேகரித்துப் பேசும் சுற்று என இரு சுற்றுகளில் மாணவர்கள் போட்டியிட்டார்கள்.
தமிழ்மொழி விழா 2023 கருப்பொருளான ‘அழகு’ என்பதையொட்டி ‘சமூக ஊடகங்கள் தமிழ்மொழியின் அழகை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க உறுதுணையாக உள்ளன’ என்ற தலைப்பில் மாணவர்கள் விவாதித்தனர்.
சிறந்த பேச்சாளருக்கான விருது தெக் வாய் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த அறிவழகன் கிரியேத்ராவுக்கு வழங்கப்பட்டது.
போட்டியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றாலும் தமிழ்மொழி ஆளுமையும் பற்றும் மாணவர்களிடையே எழ வேண்டும் என்பதே சொற்போரின் குறிக்கோள்.
“தலைப்பைப் பற்றி தகவல்கள் திரட்டுவதன்வழி தமிழ்மொழியின் அழகைப் பற்றியும் தெரிந்துகொண்டேன்,” என்று கூறினார் மேரிமவுண்ட் கான்வெண்ட் பள்ளியைச் சேர்ந்த ஞானவேலு தாரிணி.
இரு பள்ளிகளின் பேச்சாளர்களும் திறம்படத் தங்களின் வாதங்களை முன்வைக்க அரங்கமே அவர்களின் பேச்சுத் திறமையையும் சிந்தனைத் திறனையும் கண்டு வியந்தது.
“போட்டியாளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள்போல் தமிழில் சிறப்பாகப் பேசினர்,” என்று போட்டியின் தலைமை நடுவர் திருமதி சரோஜினி பத்மநாதன் குறிப்பிட்டார்.
“சிறப்பாக, தன்னம்பிக்கையுடன் தமிழில் பேசக்கூடிய மாணவர்களுக்குத் தளங்கள் அமைத்துக் கொடுக்கும் அதே நேரத்தில் தமிழில் பேசத் தயக்கம் காட்டும் மாணவர்களுக்கும் நாம் தளங்களை அமைத்துக் கொடுக்க வேண்டும். இனிவரும் தமிழ்மொழி விழாக்களில் அவ்வாறு சிந்தித்துச் செயலாற்றுவோம்,” என்ற கோரிக்கையைத் தனது வரவேற்புரையில் முன்வைத்தார் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் திரு அருண் வாசுதேவ் கிருஷ்ணன்.
செய்தி: கருணாநிதி துர்கா