அண்டை வீட்டினர் இரைச்சல் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை
அண்டை வீட்டினருக்குள் இரைச்சல் தொடர்பில் ஏற்படும் சர்ச்சைகள் குறித்து விசாரணை நடத்தவும் அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அரசாங்க அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்குவது குறித்துப் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
இரைச்சல் ஏற்படுத்தவில்லை என்று ஒரு தரப்பினர் மறுக்கும்போது, இரைச்சலைக் கண்டறியும் உணர்கருவிகளைப் பொருத்தி அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட இது கைகொடுக்கும்.
வீட்டில் தங்கியிருப்போரின் ஒப்புதலுடன் வீட்டிற்குள் சென்று இரைச்சல் எங்கிருந்து வருகிறது என்பதை முடிவுசெய்யும் அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப்படும்.
அதன் அடிப்படையில், இரைச்சலை நிறுத்தும்படி பிரச்சினையில் சம்பந்தப்பட்டோரை அதிகாரிகள் வலியுறுத்த முடியும்.
சமரசப் பேச்சில் கலந்துகொள்ளவும் மனநல சிகிச்சை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டால் அதனை நிறைவேற்றவும் அவர்களை அதிகாரிகள் வலியுறுத்த இயலும்.
விவகாரங்களை ஆரம்பக்கட்டத்திலேயே தீர்த்துக்கொள்ள இது உதவக்கூடும்.
சமுதாய விவகாரங்களுக்குத் தீர்வுகாணும் தீர்ப்பாயத்திடம் கொண்டுசெல்லப்படும் விவகாரங்களில் இறுதி முடிவு எட்டப்படும்வரை நீதிபதி இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க முடியும்.
சமுதாய விவகாரங்கள் நிர்வாகக் கட்டமைப்பில் பரிந்துரைக்கப்படும் இத்தகைய மாற்றங்கள் குறித்துக் கருத்துரைக்கும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அரசாங்கத் தலையீடு, அதிகாரிகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்கள், மீண்டும் மீண்டும் இரைச்சல் ஏற்படுத்துவோருக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதித்தல் போன்ற பரிந்துரைகள் குறித்துக் கருத்துரைக்க விரும்புவோர், go.gov.sg/feedbackcdmf எனும் இணையப்பக்கத்தை நாடலாம்.
இன்று முதல் இம்மாதம் 31ஆம் தேதி வரை அவர்கள் கருத்துகளைப் பதிவுசெய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

