கொவிட்-19 நோய்க்கான 'எம்ஆர்என்ஏ' தடுப்பூசிக்குப் பிறகு இதயப் பிரச்சினைகள்
கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான 'எம்ஆர்என்ஏ' வகை தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட சிலருக்குப் பக்கவிளைவாக இதயத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டதற்கான காரணத்தை சிங்கப்பூர் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளதாக நம்பப்படுகிறது.
'டியூக்-என்யுஎஸ்' மருத்துவக் கல்லூரி ஆய்வாளர்கள் அடங்கிய குழு, உடலில் சுரக்கும் 'ஆர்என்ஏஎஸ் இ2' எனும் திரவம் தடுப்பூசிக்குப் பிறகு இதயத்தில் பிரச்சினைகள் ஏற்படக் காரணமாய் இருக்கக்கூடும் என்று கூறியுள்ளது.
சென்ற மாதம் வெளியான 'மெட்' எனும் மருத்துவ சஞ்சிகையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆரோக்கியமான 42 வயது ஆடவர், 2021ஆம் ஆண்டு அக்டோபரில் 'மொடர்னா' பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார். அதற்குமுன் இரண்டுமுறை அவர் 'ஃபைஸர்' நிறுவனத்தின் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டிருந்தார்.
பூஸ்டர் தடுப்பூசி போட்ட முதல் நாள் நன்றாக இருந்த அவரின் உடல் நிலை நான்காம் நாளுக்குள் மோசமானது. ஐந்தாம் நாள் நெஞ்சுவலி ஏற்பட்டது. ஆறாம் நாள் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்ற அவருக்கு இதயத் தசைகளில் வீக்கம் இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
எட்டாம் நாள் வீடு திரும்பிய ஆடவர் ஒரு வாரம் கழித்து வழக்கம்போல் அன்றாட வேலைகளை செய்யத் தொடங்கினார்.
அவரையும் சேர்த்து மொத்தம் 200 பேரிடம் கொவிட்-19 தடுப்பூசிகளின் பக்கவிளைவு குறித்து தேசிய மருத்துவ ஆய்வுக் கழகம் ஆய்வு நடத்தியது.
உடலில் அதிக அளவு 'ஆர்என்ஏஎஸ் இ2' திரவம் சுரப்போருக்கு தடுப்பூசிக்குப் பிறகு இதயப் பிரச்சினைகள் ஏற்படுவதாக அதில் தெரியவந்தது.
முந்தைய ஆய்வுகள் நோய் எதிர்ப்புச் சக்தியும் இதய நோய்களும் காரணமாக இருக்கலாமெனக் கூறின. வருங்காலத்தில் பாதுகாப்பான தடுப்பூசிகளைத் தயாரிக்க அண்மை ஆய்வு முடிவு உதவக்கூடும்.

