சிங்கப்பூர் குடும்பங்கள் வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க உதவும் வகையில் ஏறக்குறைய 2.5 மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு அடுத்த மாதம் சிறப்புத் தொகை வழங்கப்படவிருக்கிறது.
பணவீக்கத்தையும் பொருள், சேவை வரி உயர்வின் தாக்கத்தையும் சமாளிக்கப் பொதுமக்களுக்கு உதவும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தத் தொகை வழங்கப்படும்.
'2023 வாழ்க்கைச் செலவின சிறப்புத் தொகை'யின்கீழ், அவர்கள் $400 வரை பெறுவர் என்று நிதி அமைச்சு நேற்று தெரிவித்தது. குறைந்த, நடுத்தர வருமானப் பிரிவினர் கூடுதல் தொகையைப் பெறுவர்.
இவ்வாண்டு 21 அல்லது அதற்கு மேற்பட்ட வயது நிரம்பியவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். வரி மதிப்பீட்டுக்குரிய ஆண்டு வருமானம் $100,000க்குமேல் இருக்கக்கூடாது. அவர்கள் ஒரு சொத்துக்குமேல் வைத்திருக்கக்கூடாது.
ஒருமுறை வழங்கப்படும் தொகையாக $200க்கும் $400க்கும் இடைப்பட்ட தொகையை அடுத்த மாதம் அவர்கள் பெற்றுக்கொள்வர்.
அவர்கள் வசிக்கும் வீட்டு வகை எதுவாக இருந்தாலும் இந்தத் தொகை வழங்கப்படும்.
மேலும், ஏறக்குறைய 850,000 முதியோர்க்குக் கூடுதல் தொகையாக வழங்கப்படும். இவ்வாண்டு 55 அல்லது அதற்கு மேற்பட்ட வயது நிரம்பியோர்க்கு $200 முதல் $300 வரையிலான தொகை வழங்கப்படும்.
இதற்கு அவர்களது வரி மதிப்பீட்டுக்குரிய ஆண்டு வருமானம் $34,000க்குமேல் இருக்கக்கூடாது. அவர்கள் குடியிருக்கும் வீட்டின் ஆண்டு மதிப்பு $21,000ஐத் தாண்டக்கூடாது. அவர்கள் ஒரு சொத்துக்குமேல் வைத்திருக்கக்கூடாது.
இத்திட்டத்தில் பங்குபெறும் 10 வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் இம்மாதம் 23ஆம் தேதிக்குள் 'பேநவ்' உடன் அடையாள அட்டை எண்ணை இணைக்கும்படி ஆலோசனை கூறப்பட்டு உள்ளது. சிறப்புத்தொகையை ஜூன் 7க்குள் பெற அது உதவும்.
மத்திய சேமநிதிக் கழகத்திடம் வங்கிக் கணக்கைப் பதிந்திருந்தால் ஜூன் 15க்குள் பெறலாம்.
'கவ்கேஷ்' மூலம் பெறுவோர் ஜூன் 20 முதல் ஓசிபிசி தானியக்க வங்கி இயந்திரங்களில் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு ஓசிபிசி வங்கியில் கணக்கு வைத்திருக்கத் தேவையில்லை.

