வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் பிடிஓ வீடுகள் ஈசூனில் கட்டப்பட்டு வருகின்றன.
அந்தக் கட்டுமான இடத்தின் குப்பைக்கூடம் உள்ள இடத்தில் இருந்து துர்நாற்றம் வருவதாக பக்கத்தில் இருக்கும் கூட்டுரிமை புளோக்கில் வசிக்கும் மக்கள் புகார் தெரிவித்தனர்.
அதை அடுத்து கழகம் குப்பைக்கூடத்தின் வழியை வேறு பக்கத்திற்கு மாற்றிவிடும்.
அங்கு சென்று குப்பையை அள்ளிச்செல்லும் வாகனங்களுக்காக புதிய வழியையும் கழகம் அமைக்கும்.
இதனால் அந்த வாகனங்கள் ஸ்கைஸ் மில்டோனியா என்ற அந்தக் கூட்டுரிமை புளோக்கிற்கு அருகே செல்லாமல் விலகிச்செல்லும்.
அந்தக் கட்டுமான இடத்தில் 1,334 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அவற்றின் விற்பனை சென்ற ஆண்டில் நவம்பரில் தொடங்கியது.
அந்த வீடுகளுக்கான தற்காலிக அனுபோக அனுமதி 2029 ஜூன் மாதம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் 66 வீட்டு உரிமையாளர்கள் மனுவில் கையெழுத்திட்டு அதை வீவக அதிகாரிகள் இடத்திலும் தங்கள் நாடாளுமன்ற உறுப்பினரான டெரிக் கோவிடத்திலும் (நீ சூன் குழுத்தொகுதி) மார்ச் 21ஆம் தேதி தாக்கல் செய்தனர்.
ஈசூனில் கட்டப்படும் மில்டோனியா பிரீஸ் என்ற பிடிஓ திட்ட வீடுகளின் கட்டுமான இடத்தின் குப்பைக்கூடத்தை அகற்றும்படி அந்த மனு கேட்டுக்கொண்டது.
மின்னஞ்சல் மூலம் இது தெரியவந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
இதன் தொடர்பில் கருத்து கூறிய கழகம், திரு கோ, அடித்தளத் தலைவர்கள் ஆகியோருடன் சேர்ந்து செயல்பட்டு, மில்டோனியா குடியிருப்பாளர்களை ஈடுபடுத்தி அவர்களின் இந்தக் கவலையைப் போக்க தான் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தது.

