கைப்பேசியைப் பார்த்தவாறே தலைகவிழ்ந்த நிலையில் சாலையைக் கடக்கும் ஆபத்தான போக்கு பற்றி 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாள் கருத்து திரட்டி இருக்கிறது.
சிங்கப்பூரின் முக்கியமான மூன்று சாலைகளிலும் ஒரு சாலை சந்திப்பிலும் கடந்த வாரம் அதன் செய்தியாளர்கள் நேரடியாகச் சென்றபோது பலரும் அந்த ஆபத்தைச் சுமந்துகொண்டு இருந்ததைக் கண்டனர்.
காத்திப் எம்ஆர்டி நிலையத்திற்கு வெளியே உள்ள ஈசூன் ரிங் ரோடு, மத்திய வர்த்தக வட்டாரத்தில் உள்ள பேட்டரி ரோடு, ஹாலந்து ரோடு கடைத்தொகுதியின் முன்னால் உள்ள ஹாலந்து அவென்யூ, ஆர்ச்சர்ட் ரோட்டில் நீ ஆன் சிட்டிக்கும் பேரகான் கடைத்தொகுதிக்கும் இடைப்பட்ட சாலைச் சந்திப்பு ஆகிய இடங்களில் அந்தக் கள ஆய்வு நடத்தப்பட்டது. தலை கவிழ்ந்தவாறு சாலையைக் கடந்த சிலரை செய்தியாளர்கள் சந்தித்துப் பேசினர்.
ஹாலந்து அவென்யூவில் உள்ள சாலையைக் கடந்த இங், 25, என்பவர், சாலைப் பாதுகாப்பை அலட்சியப்படுத்துவது ஆபத்தானது என்பது தெரிந்தும் தம்மால் இந்தப் பழக்கத்தை மாற்ற இயலவில்லை என்றார்.
"எனது கைப்பேசியை எடுத்ததுமே என்னையும் அறியாமல் எனது விரல்கள் இன்ஸ்டகிராமைத் திறந்துவிடுகின்றன," என்றார் அந்த இளையர்.
ஆர்ச்சர்ட் ரோட்டைக் கடந்த திருமதி யூனிஸ் ஹஸிகா, 23, தமது காதுகளில் இசை கேட்கும் கருவியை மாட்டி இருந்தார். சாலைக் கடக்கும்போது கைப்பேசியைப் பயன்படுத்தினாலும் இருபுறமும் கார்கள் வரவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்வேன்," என்றார் அவர்.
இவர்களைப்போல பலரும் காலை உச்சநேரத்தில் ஈசூன் ரிங் ரோட்டிலும் மதிய உணவு வேளையில் பேட்டரி ரோட்டிலும் மனம்போன போக்கில் சாலைகளைக் கடந்ததை செய்தியாளர்கள் கண்டனர். கடுமையான போக்குவரத்து நெரிசலிலும்கூட கைப்பேசிகளில் கவனம் செலுத்தியவாறு சிலர் சாலைகளைக் கடந்தனர். அதனால், சில வாகன ஓட்டுநர்கள் பலவந்தமாக தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. பெண்மணி ஒருவர் கைப்பேசியைப் பார்த்தவாறே இரண்டு ஈரடுக்குப் பேருந்துகளினூடே சாலையைக் கடந்த சம்பவமும் நிகழ்ந்தது.
கடந்த மாதம் அல்ஜுனிட் ரோடு-சிம்ஸ் அவென்யூ சந்திப்பில் 52 வயது பாதசாரி ஒருவர் கார் மோதியதில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மரண விசாரணை அதிகாரி ஆதம் நகோடா விளக்கம் அளித்தார். போக்குவரத்து விளக்கு எரிந்தபோது கைப்பேசியைப் பார்த்தவாறே சாலையைக் கடந்த அந்த ஆடவர், மனம் போன போக்கில் சாலையைக் கடக்கும் பிறரை ஓரக்கண்ணால் கவனித்தவாறே அவர்களைப் பின்தொடர்ந்தபோது கார் மோதி மரணமுற்றதாக அவர் தெரிவித்திருந்தார்.

