இறைச்சிக்காக வளர்க்கப்படும் ‘பிராய்லர்’ கோழிகளை இந்தோனீசியாவில் இருந்து இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது சிங்கப்பூர். அவை உயிருடன் இறக்குமதி செய்யப்படுகின்றன.
பறவைக் காய்ச்சல் அற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கும் பண்ணை ஒன்றில் இருந்து கோழிகள் நேற்று முன்தினம் காலை சிங்கப்பூர் வந்தடைந்தன.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற துணையமைச்சர் கோ போ கூன் நேற்று ஃபேஸ்புக்கில் இத்தகவலைப் பதிவிட்டார்.
இந்தோனீசியாவில் இருந்து உயிருள்ள கோழிகள் சிங்கப்பூருக்கு இறக்குமதி ஆவது இதுவே முதல்முறை. இதற்கு முன்னர் மலேசியாவில் இருந்து மட்டுமே உயிருள்ள கோழிகள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன.
இந்தோனீசியாவில் இருந்தும் இப்போது இறக்குமதி செய்வதால், சிங்கப்பூர் அதன் இறக்குமதியைப் பன்முகப்படுத்தியுள்ளது. கோழி இறைச்சி விநியோகத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையை வலுப்படுத்தவும் இது உதவும் என்றார் டாக்டர் கோ.
சிங்கப்பூர் அதன் தேவைக்கான 34 விழுக்காட்டு கோழி இறைச்சியை மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்துவந்த நிலையில், சென்ற ஆண்டு ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரை மலேசியா கோழி ஏற்றுமதியைத் தடை செய்தது.
விலை உயர்வையும் கோழி இறைச்சிப் பற்றாக்குறையையும் சமாளிப்பது அதன் நோக்கம்.
இதையடுத்து, பிரேசில், தாய்லாந்து ஆகியவற்றில் இருந்து இறக்குமதியாகும் கோழி இறைச்சியின் அளவை அதிகரித்தது சிங்கப்பூர்.
குளிரூட்டப்பட்ட, உறையவைக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தோனீசியாவும் இணைக்கப்பட்டது.
முதல் தொகுதி ‘பிராய்லர்’ கோழிகள் நேற்று முன்தினம் ஜூரோங் துறைமுகத்தில் வந்திறங்கியதை டாக்டர் கோ நேரில் பார்வையிட்டார்.
பிந்தானில் இருந்து கடல் வழியாக ஏறக்குறைய 23,000 உயிருள்ள கோழிகள் கொண்டுவரப்பட்டதாக ‘ஜப்ஃபா’ வேளாண்-உணவு நிறுவனம் தெரிவித்தது.
‘ஏவிஎஸ்’ எனப்படும் விலங்குநல, மருத்துவச் சேவை, இந்தோனீசிய அதிகாரிகள், கோழி இறைச்சிக்கான தொழில்துறை ஆகியவற்றோடு சிங்கப்பூர் உணவு அமைப்பு இணைந்து செயல்பட்டதால் இத்தகைய இறக்குமதி சாத்தியமானதாக அமைப்பு அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
கால்நடை, இறைச்சி, முட்டை போன்றவற்றை சிங்கப்பூர் உணவு அமைப்பு, ‘ஏவிஎஸ்’ ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்ய இயலும் என்பதை அது நினைவுறுத்தியது.
இவ்வேளையில் உணவுத் தெரிவுகளில் நீக்குப்போக்கைக் கடைப்பிடிக்கும்படி சிங்கப்பூர் மக்களை டாக்டர் கோ கேட்டுக்கொண்டுள்ளார்.
இறக்குமதியைப் பன்முகப்படுத்தினாலும் சில நேரங்களில் விநியோகத் தடை ஏற்படக்கூடும் என்றார் அவர்.
உறையவைத்த கோழி இறைச்சி, புரதச்சத்து நிறைந்த மாற்று உணவுகள் ஆகியவற்றை உண்பதன் மூலம் அனைவரும் பங்களிக்கலாம் என்றார் டாக்டர் கோ.