அறிவிக்காமல் $35,600க்கும் அதிக வெளிநாட்டு நாணயத்தை சிங்கப்பூருக்குள் கொண்டுவர முயன்ற இந்தோனீசியாவைச் சேர்ந்த இரு பெண்கள் சிங்கப்பூர் பயணப் படகு நிலையத்தில் மே 10ஆம் தேதி அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அவர்கள் ஒரு பயணப் படகில் இருந்து தரையில் இறங்கவிருந்தார்கள். பணம் பிளாஸ்டிக் பைகளில் கட்டப்பட்டு மூன்றாகப் பிரிக்கப்பட்டு இரு கைப்பெட்டிகளிலும் முதுகுப் பை ஒன்றிலும் வைக்கப்பட்டு இருந்ததாக குடிநுழைவுச் சோதனைச்சாவடி ஆணையம் நேற்று ஃபேஸ்புக்கில் கூறியது. எக்ஸ்-ரே படம் மூலம் பணம் கண்டுபிடிக்கப்பட்டது.
பிறகு அதிகாரிகள் முழு சோதனை நடத்தினர். இந்த விவகாரம் மேல் விசாரணைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூருக்கு வருகின்ற அல்லது இங்கிருந்து வெளியேறுகின்ற பயணிகள் $20,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நாண யத்தை எடுத்துவந்தால், அது பற்றியும் காசோலை முதலான விவரங்களையும் காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும்.
சட்டத்தை மீறினால் அது ஒரு குற்றமாகக் கருதப்படும். அக்குற்றத்திற்கு $50,000 வரை அபராதம், மூன்றாண்டு வரை சிறை அல்லது இரண்டும் தண்டனையாகக் கொடுக்கப்படும்.

