சிங்கப்பூரில் பெண்கள் இனிமேல் 37 வயது வரையில் தங்களுடைய கருமுட்டைகளை உறையவைத்து பாதுகாக்க முடியும். இதற்கு முன்பு இதற்கான வயது வரம்பு 35ஆக இருந்தது.
ஜூலை 1ஆம் தேதியிலிருந்து இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது.
பெண்களின் வயது வரம்பு உயர்த்துவது குறித்து உள்ளூர், அனைத்துலக ஆய்வாளர்களிடம் கருத்தறியப்பட்டது. அப்போது 37 வயது வரையில் பெண்களின் கருமுட்டைகளை உறையவைத்து வெற்றிகரமாக கருவுறுதலுக்குப் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கருமுட்டைகளை உறையவைத்து பாதுகாக்கும் பெண்களுக்கான வயது வரம்பு 35லிருந்து 37க்கு உயர்த்தப்பட்டது.
கேகே மகளிர், சிறார் நல மருத்துவனையின் செயற்கை கருத்தரிப்பு நிலையத்திற்கு நேற்று வருகையளித்த சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் புதிய மாற்றங்கள் குறித்து அறிவித்தார்.
கருமுட்டைகளை உறைய வைப்பதற்கான வயது வரம்பு 35லிருந்து அதிகரிப்பது குறித்து தொடர்ந்து மருத்துவ ஆய்வாளர்களிடமும் மருத்துவ நிபுணர்களிடமும் ஆலோசனை நடத்தப்படும் என்று 2022ல் தான் அறிவித்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது வயது வரம்பை உயர்த்துவதற்கான நம்பிக்கை கிடைத்துள்ளது என்று அமைச்சர் சுன் குறிப்பிட்டார். வரும் ஜூலை 1ஆம் தேதியிலிருந்து கருமுட்டைகளை தானம் செய்பவர்களுக்கான வயது வரம்பு 37க்கு உயர்த்தப்படும்.

