குடும்பத்தாரும் நண்பர்களும் இல்லாத நோயாளிகள், மரணத்தின் விளிம்பில் இருக்கும்போது அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையாக 'நோடா' திட்டம் 2001ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அமெரிக்காவில் தொடங்கப்பட்ட இத்திட்டம் இன்று சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளில் உள்ள மருத்துவமனைகளுக்கும் அந்திமகாலப் பராமரிப்பு இல்லங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் அலெக்சாண்டிரா மருத்துவமனையில் 2004ல் திட்டம் நடப்புக்கு வந்தது.
தற்போது 'நோடா' திட்டத்தின் கீழ் 46 தொண்டூழியர்கள் இயங்கிவருகின்றனர்.
தனிமையில் இறக்கும் தருவாயில் உள்ள நோயாளிகளுக்குத் துணையாக இருந்தவாறு ஆறுதல் அளிப்பதே இவர்களின் வேலை.
திட்டத்தில் ஆண், பெண் என 30 வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப்பட்ட ஓய்வுபெற்றவர்களும் தொழில் நிபுணர்களும் இணைந்து பங்காற்றி வருகின்றனர்.
தீராத நோயின் பிடியில் சிக்கி உயிரிழக்கவிருப்போர் 'அசிசி' அந்திமகால இல்லத்தில் சேர்க்கப்படும்போது தொண்டூழியர்கள் நோயாளிகளுடன் நண்பர்களாகி ஒரு தொடர்பை ஏற்படுத்திக்கொள்வர்.
இதனால், நோயாளியின் இறுதித் தருணங்களில் நெருக்கமான குடும்ப உறுப்பினரோ நண்பரோ தரக்கூடிய ஆறுதலை இந்தத் தொண்டூழியர்கள் வழங்கும் நிலை வந்துவிடும்.
கடந்த ஆண்டு இறுதிவரை நோடா@அசிசி திட்டத்தின் மூலம் 249 நோயாளிகளுக்கு இறுதிக்கட்ட ஆதரவு கிடைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

