கரிமப் பயன்பாடு அதிகமுடைய ஆறு துறைகளில் அதைக் குறைக்க ஓசிபிசி வங்கி உறுதிபூண்டுள்ளது.
மின்சக்தி, எண்ணெய் மற்றும் எரிவாயு, சொத்துச் சந்தை, எஃகு, விமானப் போக்குவரத்து, கப்பல் துறை ஆகியவை அதிக கரிமத்தை வெளியேற்றும் அந்த ஆறு துறைகள். அவற்றுக்கு ஓசிபிசி வங்கி கடன் வழங்குகிறது.
ஓசிபிசியின் நிறுவன, வணிக வங்கியியல் கடன் தொகுப்பில் அவை 67 விழுக்காடு பங்கு வகிக்கின்றன. ஆனால், அவற்றில் 42 விழுக்காட்டு அளவு மட்டும் கரிமப் பயன்பாட்டு இலக்கைப் பூர்த்திசெய்கின்றன.
ஓசிபிசி எடுத்துள்ள துணிகர நடவடிக்கையில், 2021க்குப் பிறகு மேம்பாட்டிற்காக ஒப்புதல் பெற்ற எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களுக்கு அவ்வங்கி நிதி வழங்காது. ஓசிபிசி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டது.
"இந்த முடிவால் வருவாய் குறைந்தாலும், நாங்கள் கருத்தில்கொள்ளும் பிரதான அம்சம் அதுவல்ல. கரிமப் பயன்பாட்டைக் குறைப்பதில் நாங்கள் கடப்பாடு கொண்டுள்ளோம். எனவே, வருவாய் என்பது இரண்டாவது விஷயம்," என்று ஓசிபிசியின் உலகளாவிய மொத்த விற்பனை வங்கியியல் நீடித்த நிலைத்தன்மை அலுவலகத் தலைவர் மைக் இங் கூறினார்.
மின்சக்தித் துறையைப் பொறுத்தமட்டில், 2030க்குள் கரிம வெளியேற்றத்தை 55 விழுக்காடு குறைக்கவும் 2040க்குள் அதை 100 விழுக்காடு குறைக்கவும் ஓசிபிசி இலக்கு கொண்டுள்ளது. உலகளவில் கரிம வெளியேற்றத்தில் மின்சக்தித் துறை 40 விழுக்காடு அங்கம் வகிக்கிறது.

