சமையல் எண்ணெய், விலங்குகளின் கொழுப்பு போன்ற கழிவுப் பொருள்களிலிருந்து விமான எரிபொருள் தயாரிக்கும் உலகின் ஆகப் பெரிய உற்பத்தி ஆலை சிங்கப்பூரில் திறக்கப்பட்டுள்ளது. கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் சிங்கப்பூருக்கு இது குறிப்பிடத்தக்கதொரு படி.
பின்லாந்து எரிசக்தி ஜாம்பவானாகக் கருதப்படும் 'நெஸ்ட்டெ' நிறுவனம் அதன் செயல்பாடுகளை துவாஸ் சவுத் சுத்திகரிப்பு ஆலைக்கு விரிவுபடுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டில் தொடங்கிய இந்த $2.3 பில்லியன் திட்டம், கொவிட்-19 கொள்ளைநோயால் ஓராண்டு தாமதமானது.
அதையடுத்து, ஆண்டுக்கு ஒரு மில்லியன் டன் அளவிலான நீடித்த நிலைத்தன்மையுடைய விமான எரிபொருளை (எஸ்ஏஎஃப்) உற்பத்தி செய்யும் ஆற்றலை ஆலை தற்போது பெற்றுவிட்டது. இது, 'நெஸ்ட்டெ' நிறுவனத்தின் முந்தைய ஆற்றலைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமாகும்.
புதுப்பிக்கத்தக்க டீசல் எண்ணெய், புதுப்பிக்கத்தக்க மூலப்பொருள்கள் போன்றவற்றையும் தயாரிக்கும் இந்த ஆலையில் உற்பத்திப் பணிகள் கடந்த மாதம் தொடங்கிவிட்டன. இவ்வாண்டு இறுதிக்குள் உற்பத்தி வேலைகள் மேலும் மும்முரமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத எரிபொருளுக்கான தேவை, விமானத்துறையில் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே ரோட்டர்டாமில் உள்ள அதன் ஆலையில் மாற்றங்கள் செய்து 'நெஸ்ட்டெ' தன் உற்பத்தி ஆற்றலை அடுத்த ஆண்டு தொடக்கத்துக்குள் பெருக்கிக்கொள்ள விரும்புவதாகக் குறிப்பிட்டது.
ஒருங்கிணைந்த ஓர் 'எஸ்ஏஎஃப்' விநியோகச் சங்கிலியை சாங்கி விமான நிலையத்துடன் 'நெஸ்ட்டெ' ஏற்படுத்திவிட்டதாக நிறுவனத்தின் இடைக்கால நிர்வாகத் துணைத் தலைவர் திரு சாமி யாவ்ஹியாய்நென் தமது அறிக்கையில் கூறினார்.
விமானங்களுக்கு 'எஸ்ஏஎஃப்'பை நேரடியாக நெஸ்ட்டெ வழங்கும் நிலையில், சான் ஃபிரான்சிஸ்கோ அனைத்துலக விமான நிலையம், லாஸ் ஏஞ்சலிஸ் அனைத்துலக விமான நிலையம், ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஸ்கிப்போல் விமான நிலையம் போன்றவை அடங்கிய ஓர் அனைத்துலகக் கட்டமைப்பில் சாங்கி விமான நிலையமும் இணைந்துவிட்டது.
விரிவுபடுத்தப்பட்ட சுத்திகரிப்பு ஆலையின் திறப்பு விழாவில் நேற்று வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் கலந்துகொண்டார்.
குறைந்த கரியமில வாயு பயணங்களுக்கு 'எஸ்ஏஎஃப்' செயல்திறன்மிக்க ஓர் அம்சமாகும் என்றார் திரு கான்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி ஓராண்டு முன்னோட்டத் திட்டத்தில் சாங்கி விமான நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் நிறுவனங்களின் விமானங்கள் வழக்கமான விமான எரிபொருளுடன் நெஸ்ட்டெ நிறுவனத்தின் 'எஸ்ஏஎஃப்'பைக் கலந்து பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

