முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனம் வருவாய் ஈட்டியுள்ளது. கொவிட்-19 கொள்ளைநோய் காலகட்டத்தில் மும்முரமாக ஆயத்தப் பணிகளில் நிறுவனம் ஈடுபட்டதே இதற்குக் காரணம் என்றார் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கோ சூன் பொங்.
கொவிட்-19 ஒரு முடிவுக்கு வந்ததும் நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடங்கிட, சரியான வளங்கள் தயார்நிலையில் இருப்பதை உறுதிசெய்யும் தன்மையைக் குழுமம் பெற்றிருந்ததால் சாதனை வருவாய் ஈட்ட முடிந்ததாக அவர் தெரிவித்தார்.
"எல்லைகள் மீண்டும் திறந்தபோது முதலில் பயணங்களைத் தொடங்கும் ஆற்றல் எங்களிடம் இருந்தது," என்று ஆய்வாளர்களிடமும் செய்தியாளர்களிடமும் திரு கோ நேற்று கூறினார்.
தற்போதைய நிதி ஆண்டுக்கான சாதனையளவு வருவாய் மற்றும் லாபம் தொடர்பான விவரங்களை நிறுவனம் நேற்று முன்தினம் வெளியிட்டது.
சாதனை எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் சென்ற காரணத்தாலும் இது சாத்தியமானதாகக் கூறப்படுகிறது.
ஓராண்டுக்குமுன் நிறுவனத்திற்கு நேர்ந்த இழப்பு $962 மில்லியன். இந்நிலையில், இவ்வாண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டில் பதிவான லாபம் $2.16 பில்லியன்.
மேலும், நடைமுறை லாபம் முந்தைய ஆண்டின் $610 மில்லியன் நட்டத்தை முறியடித்து $2.69 பில்லியன் லாபத்தை எட்டியது.
கொள்ளைநோய் 2020ஆம் ஆண்டில் முழுவீச்சில் இருந்து எல்லைகள் மூடப்பட்டு, பெரும்பாலான விமானங்களை எஸ்ஐஏ முடக்க நேரிட்டபோதும் நெருக்கடிக்குப்பின் மீள்வது குறித்து நிறுவனம் அப்போதே திட்டமிடத் தொடங்கிவிட்டதாக திரு கோ கூறினார்.
இந்தத் திட்டமிடுதலால் எல்லைகள் மீண்டும் திறந்தபோது மற்ற விமான நிறுவனங்களைக் காட்டிலும் மேலும் விரைவாகவும் செயல்திறத்துடனும் எஸ்ஐஏ அதன் விமானப் பயணங்களைத் தொடங்க நிதியும் மனிதவளமும் செயல்பாட்டு வளங்களும் இருந்தன என்று திரு கோ விளக்கினார்.
இதற்கிடையே, தன் ஊழியர்களுக்கு ஆறு மாத ஊதியத்தை போனசாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கொடுத்து வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

