மாரடைப்பால் மயங்கி விழுந்தவருக்கு உதவிய அதிகாரிகளுக்கு விருது

2 mins read
90381139-ac46-4c2c-bccc-176ac1005585
-

மோன­லிசா

சாலை­ய­ருகே அசை­வற்றுக் கிடந்­த­வ­ரின் உயி­ரைக் காப்­பாற்­றி­ய­தற்­காக சிங்­கப்­பூர்க் காவல் துறை­யைச் சார்ந்த நான்கு கூர்க்கா படை அதி­கா­ரி­க­ளுக்கு சிங்­கப்­பூர்க் குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் 'உயிர்­காப்­பான் சமூக விருது' வழங்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி காலை 11.40 மணி­ய­ள­வில் உட்­லண்ட்ஸ் தொழிற்பேட்டை பக்­கத்­தி­லுள்ள ஒரு சாலைச் சந்­திப்­பின் அருகே 50 வயது மதிக்­கத்­தக்க ஆட­வர் ஒரு­வர், தம் மிதி­வண்­டியை ஓட்­டிச்­சென்­ற­போது மார­டைப்பு ஏற்பட்டு மயங்­கிக் கிடந்­தார்.

தங்­க­ளது வழக்­க­மான சுற்­றுக்­கா­வல் பணி­யி­லி­ருந்த நான்கு கூர்க்கா படை அதி­கா­ரி­களும் ஆட­வ­ரைக் கண்­ட­தும் உட­ன­டி­யாக அவ­சர மருத்­துவ வண்­டியை உத­விக்கு அழைத்­த­னர். சிங்­கப்­பூர்க் குடி­மைத் தற்­காப்­புப் படை தொலை­பேசி வழி அளித்த வழி­காட்­டு­த­லு­டன் கூர்க்கா அதி­கா­ரி­கள் அந்த ஆட­வ­ருக்கு இதய இயக்க மீட்பு சிகிச்சை (சிபிஆர்) அளித்­த­னர்.

சிங்­கப்­பூர்க் குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் மருத்­துவ உத­வி­யா­ளர்­கள் தக­வ­ல­றிந்து வரு­வ­தற்­குள் அதி­கா­ரி­கள் தொடர்ந்து ஆறு முறை 'சிபி­ஆர்' அளித்­தனர்.

பின்­னர், அங்கு வந்து சேர்ந்த துணை மருத்துவப் படையினர் சிகிச்சை அளித்தபின் அந்த ஆட­வர் கூ டெக் புவாட் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­டார்.

விருது பெற்ற கூர்க்கா படை அதி­காரி திரு மான் குமார் லிம்பு, 40, "சம்­பந்­தப்­பட்ட நபர் நல­மாக இருக்­கி­றார் என்ற செய்தி கிடைத்த பின்­னரே எங்­க­ளுக்கு நிம்­மதி­யாக இருந்­தது. இது­போன்ற ஒரு சூழ­லில் யார் வேண்­டு­மா­னா­லும் உத­வ­லாம். இதற்­குப் பொது­மக்­கள் அனை­வரும் அடிப்­படை உயிர்­காக்­கும் சிகிச்­சை­மு­றை­க­ளைக் கற்­றுக்­கொள்­வது நல்லது," என்­றார்.

பொது­நல உணர்­வு­டன் அவ­சர காலத்­தில் பிற­ரது உயி­ரைக் காப்­பாற்­று­வோ­ரின் சமூக அக்­கறை­யைச் சிறப்­பிக்­கும் வண்­ணம் இந்­நி­கழ்­வில் 'உயிர்­காப்­பான் சமூக விருது', 'உட­னடி உதவி வழங்­கு­வோ­ருக்­கான சமூக விருது' என இரு பிரி­வு­களில் மொத்­தம் 10 பேருக்கு விரு­து­கள் வழங்­கப்­பட்­டன.