தாய்லாந்து, மியன்மார் நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட கிட்டத்தட்ட 6.8 டன் உணவுப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. டெக்ஸ்டைல் சென்டர், பெனின்சுலா பிளாசாவில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகள் உட்பட பல இடங்களில் கடந்த வியாழன் முதல் சனிவரை நடத்தப்பட்ட சோதனையில் இவை கைப்பற்றப்பட்டதாக சிங்கப்பூர் உணவு முகவை (எஸ்எஃப்ஏ) நேற்று தெரிவித்தது.
பட்டுப்புழுக்கள் உள்ளிட்ட பெரிய அளவிலான பூச்சி உணவுப் பொருள்களையும், மாடு, பன்றி, ஆட்டிறைச்சி வகைகள், கோழி, பன்றியின் ரத்தம் போன்ற பதப்படுத்தப்பட்ட மற்றும் சமைக்கப்படாத இறைச்சிப் பொருள்களை மாண்டாய் லிங்க் தொழிற்சாலைக் கட்டடத்திற்கு அருகில் ஒரு வாகனத்தில் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இவை தாய்லாந் திலிருந்து முறையான உரிமமின்றி சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டவை. அந்தக் கட்டடத்திலுள்ள ஒரு கிடங்கில், இரு நிரந்தரவாசிகள் மூன்று குளிர்சாதனப் பெட்டிகள் கொண்ட உரிமம் பெறாத கடையை நடத்தி வந்ததும் கண்டறியப்பட்டது.
டெக்ஸ்டைல் சென்டர், பெனின்சுலா பிளாசாவில் உள்ள எட்டு சில்லறை விற்பனைக் கடைகளில் தாய்லாந்து, மியன்மாரிலிருந்து இறக்குமதியான பதப்படுத்தப்பட்ட மற்றும் சமைக் காத இறைச்சி, பூச்சிகள் சட்டவிரோதமாக விற்கப்படுவதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இவற்றில் மூன்று நிறுவனங்கள் முறையான உரிமம் இல்லாமல் இயங்கி வந்தன.
அறியப்படாத மூலங்களிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதியாகும் உணவுப் பொருள்கள் உணவுப் பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்று சிங்கப்பூர் உணவு முகவை எச்சரித்துள்ளது. சிங்கப்பூரின் உணவுப் பாதுகாப்புத் தரத்துக்கு இணங்க அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் அங்கீகாரம் பெற்ற மூலங்களிலிருந்து மட்டுமே இறைச்சி மற்றும் அதன் தயாரிப்புகளை உரிமம் பெற்ற இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்ய லாம் என்றும் அது கூறியது.
விற்பனை நோக்கத்திற்காக அனுமதியின்றி இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சி, கடல் உணவுப் பொருள்களை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு $50,000 வரை அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மீண்டும் மீண்டும் குற்றம் புரிவோருக்கு $100,000 வரை அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

