சிங்கப்பூர் - கென்யா உடன்பாடுகள் கையெழுத்து

2 mins read
c94cba6e-8ca3-4b3d-be10-c61566ecd401
-

சிங்­கப்­பூ­ருக்­கும் கென்­யா­வுக்­கும் இடையே அதிக வணிக, முத­லீட்டு நட­வ­டிக்­கை­க­ளுக்கு வழி­வகுக்­கும் வண்­ணம், இரு­த­ரப்பு முத­லீட்டு உடன்­பாட்­டை­யும் முன்­னர் கையெ­ழுத்­தி­டப்­பட்ட இரட்டை வரி­வி­திப்பு தவிர்ப்பு உடன்­பாட்­டை­யும் விரை­வு­ப­டுத்த இரு­நா­டு­களும் இணங்­கி­யுள்­ளன.

மேலும், இரு நாடு­க­ளுக்­கும் இடை­யி­லான நீடித்த நிலைத்­தன்மை, திறன் மேம்­பாடு மின்­னி­லக்க பொரு­ளி­யல் ஆகி­ய­வற்­றில் மூன்று ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தா­னதை நேற்று பிர­த­மர் லீ சியன் லூங்­கும் கென்ய அதி­பர் வில்­லி­யம் ரூட்­டோ­வும் பார்­வை­யிட்­ட­னர்.

நைரோ­பி­யில் உள்ள அரசு இல்­லத்­தில் இந்த ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தி­டப்­பட்­டன.

இரு­த­லை­வர்­க­ளின் சந்­திப்­பைத் தொடர்ந்து நடந்த செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் பிர­த­மர் லீ பேசி­னார். இரு­த­ரப்பு உடன்­பா­டும் இரட்டை வரி­வி­திப்பு தவிர்ப்பு உடன்­பா­டும் விரை­வில் உடன்­பாடு காண்­பது, வணி­கங்­க­ளுக்கு வலு­வான சமிக்­ஞையை அனுப்­பும் என்­றும் எல்லை தாண்­டிய பரி­வர்த்­த­னை­கள், முத­லீட்­டில் தெளி­வை­யும் உத்தரவாதத்தையும் வழங்­கும் என்­றும் அவர் சொன்­னார்.

"மின்­னி­லக்க பொரு­ளி­ய­லில் இணைப்­பு­களை உரு­வாக்­கு­வது, உணவு, எரி­சக்தி பாது­காப்பு, நீடித்­த ­நி­லைத்­தன்­மை­யான வளர்ச்சி ஆகி­ய­வற்­றில் நாடு­கள் தொடர்ந்து ஒத்­து­ழைப்­பது முக்­கி­யம் என்­பதை நாங்­கள் ஒப்­புக்­கொண்­டோம்," என்­று பிரதமர் லீ கூறினார்.

என­வே­தான் நிர்­வா­கம், பொதுச் சேவை நிர்­வா­கம், நகர்ப்­புற திட்­ட­மி­டல் போன்ற பல்­வேறு துறை­களில் இரு தரப்­பும் அணுக்­க­மாக ஒத்­து­ழைத்து வரு­கின்­றன என்­றார் அவர்.

சிங்­கப்­பூ­ரும் கென்­யா­வும் 2021ல் 30 ஆண்டு அர­ச­தந்­திர உற­வைக் கொண்­டா­டின.

இரு­வழி வணி­கம் 2017ல் இருந்து 2.5 மடங்கு அதி­க­ரித்து 2022ல் S$212 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மாக இருந்­தது. கென்­யா­வில் உள்ள சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­கள் கப்­பல் போக்­கு­வ­ரத்து, தள­வா­டங்­கள், துறை­முக நிர்­வா­கம், வேளாண் வணி­கம், விருந்­தோம்­பல், நிதித்­தொ­ழில்­நுட்­பம் போன்ற துறை­களில் செயல்­ப­டு­கின்­றன என்று திரு லீ கூறி­னார்.

உல­கி­லேயே வெற்­றி­க­ர­மான திட்­டங்­களில் ஒன்­றான சிங்­கப்­பூ­ரின் பொது வீட­மைப்பு குறித்து அறிந்­து­கொள்­ள­வும் ஆத­ர­வைப் பெற­வும் கென்யா விரும்­பு­கிறது என்­றார் அதி­பர் ரூட்டோ.

கென்­யா­வின் போக்­கு­வ­ரத்து, தள­வா­டத் துறை­கள் போன்ற துறை­களில் முத­லீடு செய்ய சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­க­ளுக்கு அவர் அழைப்பு விடுத்­தார்.

"மிகச் சிறிய, இயற்கை வளங்­கள் இல்­லாத, செல்­வச் செழிப்பு இல்­லாத, வாரி­சு­ரி­மையே இல்­லாத ஒரு நாடு எப்­படி சரி­யான முடி­வு­களை எடுத்து வெற்­றி­பெற்­றது என்­பதை அறிந்­து­கொள்ள பிர­த­மர் லீயின் வருகை ஒரு சாட்­சி­யா­கும்," என்­றார் அவர்.

கென்­யா­வின் கேந்­திர முக்­கி­யத்­து­வம், சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­கள் கிழக்கு ஆப்பிரிக்காவுக்குள் நுழை­வ­தற்­கான வாயி­லாக செயல்­ப­டு­வ­தற்­கான சாத்­தி­யக்­கூ­று­களை திரு லீ குறிப்­பிட்­டார். மேலும் தென்­கி­ழக்கு ஆசிய சந்­தை­யில் கால்­வைக்க கென்ய நிறு­வ­னங்­க­ளுக்கு சிங்­கப்­பூர் தொடக்க தள­மாக இருக்­கும் என்­றார் அவர்.