வீரர்களின் உடல் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் வெப்பக் காயங்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கவும் சிங்கப்பூர் ஆயுதப் படை (எஸ்ஏஎஃப்) ஏற்கெனவே நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எனினும், அதிகரித்துவரும் வெப்பநிலை உயர்வைச் சமாளிக்க கூடுதல் நடவடிக்கைகள் தேவைப்படலாம்.
வீரர்கள் தற்போது பனிக்கட்டிகளை உட்கொள்வது, தண்ணீர் அணிவகுப்பு போன்ற மேற்பார்வையின்கீழ் நீர் அருந்தும் பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்.
மேலும் கடினமான நடவடிக்கைகளின்போது உடைகள், சுமைகளின் தேவைகளை மாற்றியமைக்க தளபதிகளுக்கு நீக்குப்போக்கு உண்டு என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் தற்காப்பு அமைச்சு கூறியது.
ஈரப்பதம், சூரிய வெப்பம் விழும் கோணம், சூரியக் கதிர்வீச்சு ஆகியவற்றின் விளைவுகளை கணக்கில் கொள்ளும் பூகோள வெப்பநிலையின் அடிப்படையில் வீரர்களின் பணி- ஓய்வு நேர சுழற்சி இருப்பதால், வெப்பத்தால் ஏற்படும் காயங்களின் அபாயத்தைத் தணிக்க பயிற்சி அட்டவணைகளை மாற்றியமைக்க முடியும்.
அடிப்படை ராணுவப் பயிற்சியில் சேரும்போது அல்லது அவர்கள் சிறப்புப் பயிற்சித் திட்டங்கள் அல்லது நடவடிக்கைகளில் ஈடுபடும்போது வீரர்களுக்கு அளிக்கப்படும் வெப்பத்தைப் பழக்கப்படுத்தும் பயிற்சிகளோடு கூடுதலாக இவை உள்ளன.
சிங்கப்பூர் ஆயுதப் படை முழுவதுமே வெப்பக் காயங்கள் குறித்து மிகுந்த கவனம் செலுத்தப்படுவதாகவும் பிரிவுகள் அன்றாட சம்பவங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
"உலகளாவிய வெப்பநிலை மேலும் உயரக்கூடும் என்பதால், வெப்ப மீள்திறன், செயல்திறன் முயற்சிகளை மேம்படுத்த எஸ்ஏஎஃப் அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும்," என்று அமைச்சு கூறியது. ஜனவரி மாதம் வெப்ப மீள்திறன், செயல்பாட்டு மையம் தொடங்கப்பட்டது.
2018ல் அறிமுகப்படுத்தப்பட்ட எஸ்ஏஎஃப்பில் பருவநிலைக்கு ஏற்ற 'ஹைபிரிட்' சீருடை, 2020ல் அறிமுகமான மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சுமை தாங்கும் அமைப்பு உள்ளிட்ட உடைகளையும் உபகரணங்களையும் மேம்படுத்துவது உட்பட, சிறந்தமுறையில் வடிவமைக்கப்பட்ட உபகரணங்களும் வெப்பத்தை வெளியேற்றக்கூடிய ஆடைகளும் ஆராயப்படுகின்றன என்று அமைச்சு கூறினது.
"சிங்கப்பூர் ஆயுதப் படையின் ஒருங்கிணைந்த முயற்சிகள் காலப்போக்கின் கடுமையான வெப்ப காயங்கள் ஏற்படுவதைக் குறைத்துள்ளன.
"சுற்றுப்புற வெப்பநிலை, வெப்ப காய சம்பவங்களைத் தொடர்ந்து கண்காணிப்போம், மேலும் பயிற்சியைப் பாதுகாப்பானதாக வைத்திருக்க நடவடிக்கைகளில் தேவையான மாற்றங்களைச் செய்வோம்," என்று தற்காப்பு அமைச்சு கூறியது.

