எரிசக்தி மீள்திறனை வலுப்படுத்த புதிய மின்னாலை அமைகிறது

2 mins read
2a82785b-482c-407f-bfd9-0410c1d3a56e
-

சிங்­கப்­பூர் தனது எரி­சக்தி மீள்­திறனை வலுப்­ப­டுத்த நட­வ­டிக்­கை­கள் எடுத்து வரு­கிறது.

அவ்­வ­கை­யில், எரி­சக்­திச் சந்தை ஆணை­யம் ஜூரோங் தீவில் ஒரு புதிய மின்­னா­லையை அமைக்­க­வி­ருக்­கிறது.

'ஓசி­ஜிடி' எனும் எரி­வாயு விசைச்­சு­ழ­லி­கள் இரண்டு அந்த மின்­னா­லை­யில் இடம்­பெ­றும்.

அந்த ஆலை 2025 ஜூனில் செயல்­பாட்­டிற்கு வரும்­போது அவ்­வி­சைச்­சு­ழ­லி­கள் ஒவ்­வொன்­றும் 340 மெகா­வாட் மின்­சாரத்தை உற்­பத்தி செய்­யும் திற­னைக் கொண்­டி­ருக்­கும்.

இயற்கை எரி­வாயு அதன் முதன்மை மூலப்­பொ­ரு­ளாக இருக்­கும். இருப்­பி­னும், டீசல் எரி­பொ­ரு­ளா­லும் அவை இயங்­க­வல்­லவை.

அவ்­விரு விசைச்­சு­ழ­லி­களும் 30 விழுக்­காடு வரை ஹைட்­ர­ஜ­னை­யும் மூலப்­பொ­ரு­ளாக எடுத்­துக்­கொள்­ளும். உரிய மேம்­பா­டு­களைச் செய்­தால், அவை முழு­மை­யாக ஹைட்­ர­ஜ­னா­லும் இயங்க முடி­யும்.

எதிர்­பா­ராத வகை­யில் மின்­விநி­யோ­கத்­தில் பற்­றாக்­குறை ஏற்­பட்­டால் அதனை ஈடு­கட்­ட­வும் இடை­யூ­று­கள் ஏற்­படும் அபா­யங்­க­ளைக் குறைக்­க­வும் இந்த முக்கிய எரி­சக்­திக் கட்­ட­மைப்பு உத­வும் என்று ஆணை­யம் தெரி­வித்­தது.

நேற்று இடம்­பெற்ற புதிய மின்­னா­லைக்­கான நில அகழ்வு நிகழ்ச்­சி­யில் வர்த்­தக, தொழில் இரண்­டாம் அமைச்­சர் டாக்­டர் டான் சீ லெங் கலந்­து­கொண்­டார்.

"கடும் வெயிலை இப்­போது நாம் எதிர்­கொண்­டு­வ­ரும் சூழ­லில், தற்­போது செயல்­பாட்­டில் உள்ள 'ஓசி­ஜிடி' விசைச்­சு­ழ­லி­கள் உச்ச வேளை­யில் தொடர்ந்து மின்­சா­ரத்தை விநி­யோ­கித்து வரு­கின்­றன," என்று டாக்­டர் டான் கூறி­னார்.

'சிசி­ஜிடி' எனப்­படும் ஒருங்­கிணைந்த சுழற்சி எரி­வாயு விசைச்சு­ழ­லி­க­ளு­டன் கூடிய மின்­ ஆ­லை­களே செயல்­தி­றன்­மிக்­கவை என்று அவர் குறிப்­பிட்­டார்.

ஆயினும், மற்ற 'சிசி­ஜிடி'க்கள் தொழில்­நுட்­பக் கோளாறு­க­ளால் முடங்க நேர்ந்­தால் அவ்­வகை மின்­னா­லை­க­ளால் விரை­வில் உற்­பத்­தி­யைத் தொடங்க முடி­யாது.

'சிசி­ஜிடி'க்கள் முழு உற்­பத்தி அளவை எட்ட 14 மணி நேரம் வரை ஆக­லாம். அந்த விசைச்­சு­ழலி இயங்­கத் தொடங்கி, குறைந்­தது ஆறு மணி நேரம் இயங்­கிய பிறகே அதனை நிறுத்த இய­லும்.

அது­போல, நிறுத்­தப்­பட்­ட­பின் குறைந்­தது ஆறு மணி நேரம் கழித்தே அதனை மீண்­டும் இயக்க முடி­யும்.

இப்­போ­துள்ள 'ஓசி­ஜிடி' விசைச்­சு­ழ­லி­கள் 30 ஆண்­டு­களுக்­கும் மேலா­கச் செயல்­பாட்­டில் உள்­ளன என்­றும் அவற்றை மாற்ற வேண்­டிய வேளை வந்­து­விட்­டது என்­றும் ஆணை­யம் குறிப்­பிட்­டது.

ஆணை­யத்­தின் துணை நிறு­வ­ன­மாக 'மெராந்தி பவர்', 'ஓசி­ஜிடி' விசைச்­சு­ழ­லி­க­ளு­டன் கூடிய புதிய மின்­னா­லையை அமைக்­கும் பணியை மேற்­கொள்­ளும்.