செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
a86fa9a9-b41d-4583-ade7-d4cf16298048
-

நிறைவுறாத புதுப்பிப்புப் பணிகள்; நான்காண்டு கடந்தும் காத்திருப்பு

புதுப்பிப்புப் பணிகளுக்காகக் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரலில் மூடப்பட்ட தாம்சன் சமூக மன்றம், நான்கு ஆண்டுகளாகியும் இன்னும் திறக்கப்படவில்லை. 2019ஆம் ஆண்டிலேயே புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெற்றுவிடும் என முதலில் கூறப்பட்டது. ஆனாலும், கொவிட்-19 தொற்றுப் பரவலால் அப்பணிகள் தடைபட்டன. புதுப்பிப்புப் பணிகள் இன்னும் நிறைவடையாததால் தாங்கள் விரக்தி அடைந்துள்ளதாகவும் அங்குள்ள வசதிகளைப் பயன்படுத்த முடியாமல் இழக்க நேரிட்டுள்ளதாகவும் அம்மன்றத்திற்கு அருகே வசிக்கும் குடியிருப்பாளர்கள் சிலர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி தெரிவித்தது. இந்நிலையில், மேரிமவுண்ட் சமூக மன்றம், பீஷான் ஸ்திரீட் 13ல் உள்ள பீஷான் சமூக மன்றம், பீஷான் ஸ்திரீட் 22ல் உள்ள தாம்சன் சமூக மன்றம் (தற்காலிக அலுவலகம்) ஆகியவற்றில் உள்ள வசதிகளையும் நடவடிக்கைகளையும் குடியிருப்பாளர்கள் அணுகலாம் என்று தாம்சன் சமூக மன்றத்தின் மேலாண்மைக் குழு கூறியதாகவும் அச்செய்தி குறிப்பிட்டிருந்தது.

ஆய்வு: மனச்சோர்வு, பதற்றத்தால்

24 நாள்கள் பள்ளி செல்லவில்லை

மனச்சோர்வு, பதற்றம் காரணமாகச் சென்ற ஆண்டில் சிங்கப்பூர் குழந்தைகளிலும் இளையர்களிலும் சிலர்

24 நாள்கள் பள்ளி செல்லவில்லை என்பது அண்மைய ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது. அவர்களில் மூவரில் இருவர் திட்டமிடாத வகையில் அவசர மருத்துவப் பிரிவை நாடினர்; பாதிக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கருத்தாய்வில் பங்கேற்ற பெற்றோர் ஒவ்வொரு குழந்தையின் மனநலத்திற்காகவும் சராசரியாக $10,250 செலவிட்டனர். இளையர்களின் மனநலம் குறித்து அளவிடும் வகையில், டியூக்-என்யுஎஸ் மருத்துவக் கழகமும் மனநலக் கழகமும் நான்கு முதல் 21 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளைக் கொண்ட பெற்றோரிடம் நடத்திய ஆய்வின்மூலம் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. 2022 ஏப்ரல்-ஜூன் கால கட்டத்தில் தங்களது 1,515 பிள்ளைகள் குறித்து, 991 பெற்றோரிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 12 விழுக்காடு இளம்பிள்ளைகள் மனச்சோர்விற்கான அறிகுறிகளையும் 13 விழுக்காட்டினர் பதற்றத்திற்கான அறிகுறிகளையும் கொண்டிருப்பது பெற்றோர்கள் அளித்த பதில்களின்மூலம் அடையாளம் காணப்பட்டது. ஒட்டுமொத்தத்தில், 16.2 விழுக்காடு இளையர்களிடத்தில் இவ்விரண்டில் ஏதேனும் ஒரு பிரச்சினைக்கான அறிகுறிகள் தென்பட்டதாகக் கூறப் பட்டது. அவர்களில் 39 விழுக்காட்டினர் ஒரு மாதம் அல்லது அதற்கு மேலான பள்ளி நாள்களைத் தவறவிட்டனர்.