அங் மோ கியோ எவென்யூ எட்டு காப்பிக் கடை ஒன்றில் இருக்கும் உணவுக் கடையில் ராட்சத எலி காணப்பட்டது.
அங்கிருக்கும் 'பான் மி சைகோன்' எனும் வியட்னாமிய உணவு வகைகளை விற்கும் கடையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
வெள்ளிக்கிழமை (19 மே) இரவு 8.45 மணிக்கு அக்கடைக்குக் சென்ற ஆடவருக்கு அங்கு பொருள்கள் வைக்கப்படும் இடத்தில் பிளாஸ்டிக் பொட்டலங்கள் அசையும் சத்தம் கேட்டிருக்கிறது.
சத்தம் பலத்த காற்றால் ஏற்பட்டது என்று நினைத்த ஆடவருக்குக் காத்திருந்தது அதிர்ச்சி.
சத்தம் ஓயாததால் அருகே சென்று பார்த்தபோது உடனடி நூடல்ஸ் (இன்ஸ்டன்ட் நூடல்ஸ்), அரிசிப் பொட்டலங்கள் வைக்கப்பட்ட பகுதியில் ஓர் எலி ஓடிக் கொண்டிருந்ததை அவர் கண்டார்.
500 மில்லிலீட்டர் அளவு நீர் உள்ள போத்தலின் நீளத்துக்கு எலி இருந்ததாக அந்த 34 வயது ஆடவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
இது குறித்து அவர் சிங்கப்பூர் உணவு அமைப்பிடம் புகார் கொடுத்துள்ளார்.
டிக்டாக் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட இச்சம்பவத்தைக் கொண்ட காணொளி 100,000க்கும் அதிகமான முறை காணப்பட்டிருக்கிறது.

