அங் மோ கியோவில் செயல்படும் வியட்னாமிய ரொட்டி உணவுக் கடையின் உணவுப்பொருள்கள் அலமாரியில் தண்ணீர் போத்தல் அளவுக்கு எலி ஒன்று ஓடியதைப் பார்த்த பலரும் நடுங்கிப் போய்விட்டனர்.
அங் மோ கியோ அவென்யூ 8ல் செயல்படும் காப்பிக்கடையில் உள்ள 'பான் மி சைகோன் ஸ்டால்' என்ற அந்த உணவுக் கடையில் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 8.45 மணிக்கு இருந்த மெல்வின் லீ என்பவர் அந்த அலமாரியில் பிளாஸ்டிக் பொட்டலங்களில் சரபுரவென சத்தம் கேட்டதைக் கண்டு திரும்பிப் பார்த்தார்.
காற்றுதான் காரணமாக இருக்கும் என்று நினைத்த அவர், திரும்பத் திரும்ப சத்தம் வந்ததை அடுத்து உற்று பார்த்தபோது ஒரு பெரிய எலி நடமாடியதைக் கண்டார்.
அந்த எலி சுமார் 500 மி.லி. தண்ணீர் போத்தல் அளவுக்குப் பெரிதாக இருந்தது என்று அவர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
அதைக் கண்ட மற்ற பலரும் அந்த அலமாரியைவிட்டு விலகிபோய்விட்டனர் என்றும் அவர் கூறினார். எலி ஓடியதைக் காட்டும் காணொளி டிக்டாக்கில் சனிக்கிழமை இடம்பெற்றது.
அது 100,000க்கும் மேற்பட்ட தடவை பார்க்கப்பட்டு உள்ளது.
எலி பற்றி அவர் சிங்கப்பூர் உணவு முகவை அமைப்பிடம் புகார் தெரிவித்து இருக்கிறார்.

