வாழ்க்கைத் துணை பராமரிப்பு அமலாக்கத் துறை அதிகாரி களைக்கொண்ட ஒரு புதிய பிரிவு செயல்படத் தொடங்கி உள்ளது.
மணவிலக்கின் பேரில் பராமரிப்புத் தொகையை வழங்க வேண்டிய தேவை இருப்பவர்கள் இனிமேல் தங்களுடைய சொத்துகளை மறைப்பது சிரமமான ஒன்றாகிவிடும்.
அதேபோல, முன்னாள் மனைவி போன்ற குடும்ப உறுப்பினருக்குக் கொடுக்க வேண்டிய தொகையைக் கொடுக்காமல் இருப்பதும் இனிமேல் சிரமமாகிவிடும்.
அப்படி கொடுக்க தவறுவோரின் சம்மதமின்றி, அவருடைய வருமானம், சொத்துகள் பற்றிய விவரங்களை வங்கிகள், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், மத்திய சேமநிதிக் கழகம் போன்ற மூன்றாம் தரப்புகளில் இருந்து அந்த அதிகாரிகள் பெற முடியும் என்பதே காரணம்.
குடும்ப நீதி சீரமைப்பு மசோதா என்ற ஒரு மசோதாவின் ஓர் அங்கமாக அத்தகைய அதிகாரிகளின் பணிகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
அந்த மசோதா மே மாதம் 8ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
புதிய ஏற்பாடு, இப்போதுள்ள பராமரிப்பு பதிவுத் துறை அதிகாரிகளுக்கு மாற்றாக இடம்பெறுகிறது.
இந்த விவரங்களைச் சட்ட, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளுக்கான பேச்சாளர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது. பராமரிப்பு பதிவுத் துறை அதிகாரிகள் முறை 2016ஆம் ஆண்டு ஒரு முன்னோடித் திட்டமாக அறிமுகமானது.
பராமரிப்புத் தொகையைக் கொடுக்காதவர்களை நீதிமன்றம் அடையாளம் காண உதவுவதற்காகவும் அத்தகைய குற்றம் புரிவோருக்குக் கடும் தண்டனை விதிக்க ஏதுவாகவும் அந்த முன்னோடித் திட்டம் அறிமுகமானது.
இப்போதைய அதிகாரிகளுக்கு உள்ள அதிகாரம், முந்தைய பதிவுத் துறை அதிகாரிகளுக்குக் கிடையாது.
அவர்கள் முன்னாள் கணவரிடம் இருந்து தகவல்களையோ, ஆவணங்களையோ கேட்டுப் பெற முடியாத நிலை இருந்தது.
இப்போதைய அதிகாரிகளுக்குத் தேவையான தகவல்கள் கிடைத்துவிடும் என்பதால், உண்மையிலேயே பராமரிப்புத் தொகையைக் கொடுக்க இயலாமல் இருப்போரை நிதி உதவித் திட்டங்களுக்கு அவர்கள் பரிந்துரைக்க முடியும்.
பராமரிப்புத் தொகையைத் தரக்கூடிய நிலையில் இருந்தும் அதைத் தரவில்லை என்றால் அவர்களுக்குப் பொருத்தமான தண்டனையை முடிவுசெய்ய நீதிமன்றங்கள் இனிமேல் முன்பைவிட சிறப்பான ஒரு நிலையில் இருக்கும்.

