பிரதமர் லீ சியன் லூங்கிற்கு கொவிட்-19 தொற்று இருந்தது நேற்று தெரியவந்தது.
தென் ஆப்பிரிக்கா, கென்யா ஆகிய நாடுகளுக்கு அண்மையில் தான் பயணம் மேற்கொண்டதாகவும் அப்பயணங்களுக்குப் பிறகு தனக்கு கொவிட்-19 தொற்று இருந்தது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் நேற்று ஃபேஸ்புக்கில் திரு லீ தெரிவித்தார்.
இருந்தாலும் பொதுவாக தன் உடல்நிலை நன்றாக இருப்பதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
தொற்று அறிகுறிகள் முழு மையாக அகலும்வரை தனிமையில் இருந்து கொள்ளும்படி மருத்துவர்கள் தனக்கு ஆலோசனை கூறி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தன் வயதைக் கருத்தில் கொண்டு தனக்கு 'பாக்ஸ்லோவிட்' என்ற மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைத்து உள்ளதாக 71 வயது திரு லீ குறிப்பிட்டார்.
பிரதமர் ஆகக் கடைசியாக சென்ற நவம்பரில் கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.
"தயவு செய்து அப்போதைக்கு அப்போது போட்டுக்கொள்ள வேண்டிய தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு வாருங்கள். அதனால் கடுமையான பாதிப்புகள் தவிர்க்கப்பட்டுவிடும்.
"சிங்கப்பூரில் இனிமேல் கொவிட்-19 கிருமி இருக்கத்தான்செய்யும் என்பதால் நாம் தொடர்ந்து பாதுகாப்பாகவும் உடல்நலத்தோடும் இருந்து வரவேண்டியது கட்டாயமான ஒன்று," என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

