பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்திற்கு மாறுவது சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்திற்கு (எஸ்ஐடி) பெரிய சமூகத்தின் ஒரு பகுதியாகவும் தொழில்துறையுடன் ஒருங்கிணைக்கவும் வாய்ப்பளிக்கிறது என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் நேற்றுத் தெரிவித்துள்ளார்.
பொங்கோலில் எஸ்ஐடி கட்டுமானத்தின் இறுதிக்கட்ட விழாவில் நேற்று பேசிய திரு சான், இது பொங்கோலின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தின் மையமாக இது அமையும்,” என்றார்.
இது ஒரு செயல்முறைப் பல்கலைக்கழகமாக அதன் நிலையை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது என்று அவர் சொன்னார். தனது சொந்த வளாகத்திற்குள் செயல்படத்தொடங்கும்போது எஸ்ஐடி பலதுறைத் தொழிற்கல்லூரிகளுடான அதன் தொடர்பை விட்டுவிடக்கூடாது என்பது கல்வி அமைச்சரின் விருப்பம்.
“அனைத்து பலதுறைத் தொழிற்கல்லூரிகள் மற்றும் எஸ்ஐடிக்கு அப்பாற்பட்ட பிற நிறுவனங்களுடன் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளதே எஸ்ஐடியை ஒரு பல்கலைக்கழகமாகத் தனித்துக் காட்டுகிறது,” என்று அவர் கூறினார்.
இளநிலைப் பட்டப்படிப்பைவிட, முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதுடன் பெரியோர் கல்விக்கு எஸ்ஐடி வினையூக்கியாக இருக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
ஒவ்வொரு குழுவிலும் கிட்டத்தட்ட 40,000 இளங்கலைப் பட்டதாரிகள் இருக்கிறார்கள். சிங்கப்பூர் வேலைச் சந்தைத் தேவைகளுக்கு ஏற்ப ஏறக்குறைய 400,000 முதல் 500,000 பெரியவர்களுக்கு மறுபயிற்சியளிக்க வேண்டும். எஸ்ஐடி வயது வந்தோருக்கான தொடர் கல்வி நிறுவனமாக முன்னேறும் என்று நம்புவதாக அமைச்சர் சான் குறிப்பிட்டார்.
அதைச் செய்ய முடிந்தால், எஸ்ஐடி ஓர் உயர்கல்வி நிறுவனமாக மட்டுமின்றி, தொடர்ச்சியான கல்விக்கான நிறுவனமாகவும் இருக்கும். சமூகத்தில் உள்ள மக்கள், தொழில்துறைகள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தொழிற்கல்வி நிலையங்கள் ஆகியவற்றை எட்டி பெரியவர்களுக்கான கற்றல் பாதையின் ஒரு மையப் புள்ளியாக உருவாகும் என்றார் அமைச்சர்.
சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் (எஸ்ஐடி) கட்டம் கட்டமாக பொங்கோலுக்கு இடம்மாறும். அதன் புதிய 91,000 சதுர மீட்டர் வளாகத்தில் 2024 செப்டம்பரில் மாணவர்கள் வகுப்புகளைத் தொடங்குவார்கள்.
“எஸ்ஐடி கேம்பஸ் ஹார்ட்”, “எஸ்ஐடி கேம்பஸ் கோர்ட்” இரு அடுக்குகளைக் கொண்டது. ஜூரோங் நகராண்மைக் கழகத்தின் (ஜேடிசி) பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் அமைந்துள்ள எஸ்ஐடி வளாகத்தின் கட்டுமானப் பணிகள் மூன்றில் இரண்டு பங்கு நிறைவடைந்துள்ளன. 2024 இரண்டாம் பாதியில் இது செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல்கலைக்கழகத்தில் தற்போது கிட்டத்தட்ட 9,000 மாணவர்கள் உள்ளனர். அவர்களும் பணியாளர்களும், டோவர் டிரைவ் மற்றும் பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் உள்ள ஆறு வளாகங்களில் உள்ளனர்.
12,000 மாணவர்கள் படிக்கக்கூடிய புதிய வளாகம், 2024ல் திறக்கப்பட உள்ளது. இது பொங்கோல் கோஸ்ட் எம்ஆர்டி நிலையத்திற்கருகில் அமைந்துள்ளது.
‘த ஹாச்சரி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த 10 மாடிக் கட்டடம் இணைய வழி கற்றல், நேரடி வகுப்புகள் இரண்டையும் ஆதரிக்கவும், விவாதத்தை ஊக்குவிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான படிக்கும் அறைகள் போன்ற முக்கிய அம்சங்களைப் பெற்றிருக்கும்.
இங்கு கிட்டத்தட்ட 2,200 நிர்வாக ஊழியர்களும் ஆசிரியர்களும் இருப்பர். அரங்கம், பலபயன் அரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நடன, இசை அறைகள் போன்ற வசதிகள் இங்கிருக்கும்.
தொழில்துறைக்கான சிங்கப்பூரின் பல்கலைக்கழகம் என்று பெயர் பெற்றுள்ள சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம், பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் அமைந்திருப்பது, நிறுவனங்களுடன் பணிபுரிய அதிக வாய்ப்புகளை வழங்குகிறது என்று எஸ்ஐடியின் தலைவர் சுவா கீ சாய்ங் கூறினார்.