திறன்பெற்ற ஊழியர்களுக்கான கடுமையான பற்றாக்குறை கடந்த ஓராண்டாக நிலவி வந்தது. ஊழியர்கள் தங்களுக்குப் பிடித்த வேலைகளை நாடுவது, தங்களுக்குத் தோதான சம்பளங் களையும் வேலைச் சூழ்நிலையையும் நாடுவது என்று ஒரு வேலையிலிருந்து விலகி இன்னொரு வேலையைத் தேர்வு செய்த முறை இப்போது முற்றிலும் மாறிவிட்டது என்று ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்காக மில்லியூ இன்சைட் நிறுவனம் நடத்திய ஆய்வில், 68% சிங்கப்பூர் ஊழியர்கள் தங்கள் வேலைகளில் தொடர்ந்து நீடிக்க விரும்புவதாகத் தெரிவித்து
உள்ளனர்.
ஒப்புநோக்க, கடந்த ஆண்டு நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் பத்தில் ஏழு ஊழியர்கள் அடுத்த ஆறு மாதங்களுக்குள் தங்கள் வேலைகளிலிருந்து விலக விரும்புவதாகத் தெரிவித்தனர்.
இதன் மூலம் கொவிட்-19 காலத்தில் இருந்த இந்த பதவி விலகல் அலை இப்போது நிறைவுபெறும் நிலையில் உள்ளது என்று தெரியவருகிறது. அது இப்போது பெருந்தொற்றுக் காலத்துக்கு முந்திய பதவி விலகல் நிலையைவிடக் குறைவாக உள்ளது என்று ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் கூறின.
"பொருளியல் நிலையில் மோசமான மாற்றம் தென்படவில்லை என்றால் இது விரைவில் சமநிலையை அடையக்கூடும்," என்று சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனத்தின் நிர்வாக இயக்குநர் சிம் கின் குவான் தெரிவித்தார்.
இவ்வாண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இந்தோனீசியா, வியட்னாம், பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து தலா 1,000 ஊழியர்கள் பங்கேற்ற இந்த ஆய்வை மில்லியூ நிறுவனம் மேற்கொண்டது.
ஊழியர்களின் பதவி விலகல் குறித்து மனமாற்றத்தில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. பெருந்தொற்றுக் காலத்துக்குப் பிறகு, தற்போது அவர்கள் பார்க்கும் வேலையில் ஊழியர்கள் 18 மாதங்களுக்கும் குறைவாகத்தான் பணியாற்றியிருக்கிறார்கள் என்றார் மெர்செர் ஏஷியா உலகளாவிய ஆலோசனை நிறுவனத்தின் தலைவர் பெட்டா லட்டிமர்.
"பணவீக்க அதிகரிப்பு, வாழ்க்கைத் தர உயர்வு, பயணத் தேவையின் அதிகரிப்பு போன்ற அம்சங்கள் வேலைப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் நிலைத்தன்மையையும் ஊழியர்களிடையே அதிகரித்துள்ளது என்றும் திருவாட்டி லட்டிமர் தெரிவித்தார்.
இதற்கிடையே, சிங்கப்பூரின் ஊழியர்கள் பதவி விலகும் விகிதம், பொருந்தொற்று உச்சத்தைத் தொட்ட 2020ஆம் ஆண்டைத் தவிர்த்து, கடந்த 10 ஆண்டுகளில் ஆகக் குறைந்துள்ளதாகவும் ஆய்வு கூறுகிறது.

