ஐந்து மில்லியன் வெள்ளி அல்லது அதற்கும் அதிகமான மதிப்பிலான கட்டுமானத் திட்டங்களுக்குக் காணொளிக் கண்காணிப்பு முறை இருப்பது கட்டாயமாக்கப்படுகிறது.
இதன்படி 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் சம்பந்தப்பட்ட கட்டுமானத் தளங்களில் காணொளிக் கண்காணிப்பு முறைகள் செயல்படுத்தப்படவேண்டும் என்று மனிதவள அமைச்சு அறிவித்துள்ளது.
ஊழியர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்குடன் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
வேலையிட ஊழியர் மரணங்களைக் குறைக்கவும் வேலையிடங்களில் ஊழியர்கள் காயமடைவதைத் தவிர்க்கவும் செவ்வாய்க்கிழமையன்று பல நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன.
அவற்றில் காணொளிக் கண்காணிப்பு முறையும் அடங்கும்.
அபாயகரமான நடவடிக்கைகள் அதிகம் மேற்கொள்ளப்படும் கட்டுமானத் தளங்களில் காணொளிக் கண்காணிப்பு முறை இடம்பெறவேண்டும்.
அவற்றுக்கான செலவை நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேல்விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.