வெய்யில் கடுமையாகி வெப்பநிலை சாதனை அளவுக்கு உயரும்போது சூரியக் கதிர்களில் இருந்து தோலைப் பாதுகாக்கும் களிம்பைத் தடவிக்கொள்ளுங்கள். அல்லது நிழலில் இருந்து கொள்ளுங்கள்.
சூரியக் கதிர்கள் நேரடியாக உங்கள் மீது படாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று வல்லுநர்கள் ஆலோசனை கூறி இருக்கிறார்கள்.
வெப்பநிலைக்கும் புறஊதா கதிருக்கும் இடையில் தொடர்பு எதுவும் இல்லை என்றாலும் புறஊதா கதிர்களின் அளவு கூடும்போது தோலில் வியர்க்குரு, கொப்பளம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதர பாதிப்புகளுக்கும் வாய்ப்பு உண்டு என்று அவர்கள் தெரிவித்தனர்.
புறஊதா கதிர் அளவு 8 முதல் 10 வரை அதிகமாக இருக்கையில் சூரியக் கதிர் உடலில் நேரடியாகப் பட்டால் தோல், கண்களுக்கு விரைவாகப் பாதிப்புகள் ஏற்படலாம் என்று தோல் நிபுணர்கள் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இதனிடையே, மே மாதம் புறஊதாக் கதிர் அளவு அட்டவணை 10ஐ தாண்டியதாக சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது.
அந்த அளவு 11ஐ தாண்டிவிட்டால் அது உச்சநிலையை அடைந்துவிட்டதைக் குறிக்கும்.
புறஊதா கதிர் அட்டவணை என்பது, சூரிய ஒளியின் மூலம் பூமியில் ஏற்படக்கூடிய புறஊதா கதிரியக்கத்தின் அளவைக் குறிப்பதாகும். ஆகக் குறைவான அளவு 0. 3 முதல் 5 முறை அந்த அளவு இருந்தால் அது மிதமான நிலையைக் குறிக்கும்.
சிங்கப்பூரைப் பொறுத்தவரை அன்றாட சராசரி கூடினபட்ச புறஊதா கதிர் அளவு பொதுவாக 6 முதல் 7 வரைதான் இருக்கும்.
இதுவரையில் இந்த ஆண்டில் புறஊதா கதிர் அட்டவணை 53 நாள்களில் 10ஐ தாண்டி இருக்கிறது என்று வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது.
புறஊதா கதிரியக்க அளவை காற்றின் வெப்பநிலை பாதிப்பதில்லை, காற்று மண்டலத்தில் ஓசோன் அதிகமாக இருந்தால் கதிரியக்கம் குறைந்துவிடும். மேகமூட்டமும் புறஊதா கதிரியக்கத்தைக் குறைக்க உதவும் என்று நிலையம் தெரிவித்தது.
சிங்கப்பூரில் மார்ச் மாதம் சூரியன் நிலநடுக்கோட்டிற்கு நேரே வரும். அந்த மாதத்தில் அதிக நாள்களில் புறஊதா கதிர் அட்டவணை 10ஐயும் தாண்டும்.
அந்த நாள்களில் புறஊதா கதிரியக்கம் மிகத் தீவிரமாக இருக்கும். மார்ச் 2ஆம் தேதியும் மார்ச் 8ஆம் தேதியும் புறஊதா அட்டவணை 13ஐ தொட்டது.

