சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு முப்பதுக்கும் மேற்பட்ட சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் ஒன்றுகூடி வரவேற்பு அளிக்கின்றன.
இன்று இரவு 7 மணிக்கு சன்டெக் சிட்டி மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் அந்தச் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சியில் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். முன்பதிவு செய்து அழைப்பிதழ் பெற்றவர்கள் மட்டுமே நிகழ்வில் கலந்துகொள்ளலாம்.
அடுத்தாண்டு தமிழகத்தில் நடைபெற இருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை முன்னிட்டு வெளிநாட்டு தொழிலதி பர்களை திரு ஸ்டாலின் சந்திப்பார்.
முதல்வருடன் வந்துள்ள தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, முதல்வர் இருவரும் சிங்கப்பூர் இந்திய வர்த்தக தொழிற்சபையின் (சிக்கி) தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டிலும் இன்று பங்கேற்பர்.
கைடன்ஸ் இந்தியா இணைந்து நடத்தும் அந்த மாநாட்டில் போக்குவரத்து அமைச்சரும் வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு எஸ் ஈஸ்வரன், இந்தியத் தூதர் திரு பெரியசாமி குமரன், சிக்கியின் தலைவர் திரு நீல் பரேக் ஆகியோரும் கலந்துகொள்வர்.
சிங்கப்பூர் நிறுவனங்களுக்கும் தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன.