மின் வர்த்தகத் தளமான 'கெரோசல்' மூலம் தாம் ஏமாற்றிய 13 பேரிடம் அவர்களிடமிருந்து பறித்த தொகையை முழுமையாகத் திருப்பிக் கொடுக்க இருந்தபோது மீண்டும் மோசடி குற்றத்தைப் புரிந்தார் 23 வயது நிக்கலஸ் ஓங் சான் ஹுய்.
அதே தளத்தில் மீண்டும் குற்றம்புரிந்து 128 பேரை அவர் ஏமாற்றினார். இந்த 128 பேரும் ஓங்கிடம் கிட்டத்தட்ட $148,000 இழந்தனர்.
தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட ஓங்கிற்கு 23 மாதங்கள், ஆறு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டில் கெரோசல் மூலம் 'சிக்ரட்லேப்' நாற்காலிகளின் விற்பனை தொடர்பான மோசடியில் ஈடுபட்டபோது, ஒங் முழுநேர தேசிய சேவையாளராக இருந்தார்.
அந்த மோசடியில், 13 பேர் மொத்தம் $4,359 இழந்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விவரங்களை நீதிமன்ற ஆவணங்கள் வெளியிடவில்லை.
ஆனால், 2021ல் தேசிய சேவையை முடித்த ஒங், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் இழந்த முழுத்தொகையையும் திருப்பிக்கொடுத்துவந்த வேளையில், மீண்டும் குற்றம் புரிந்து மேலும் அதிகமானோரை ஏமாற்றினார்.
இதுவரை முதலில் நடந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் முழுத் தொகையைத் திருப்பிக்கொடுக்கவில்லை. இன்னும் $2,413 எஞ்சியுள்ளது.
2021ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதிக்கும் 2022ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில், 'ஐஃபோன்', 'பிளேஸ்டேஷன் 5' போன்ற பொருள்கள் தம்மிடம் விற்பனைக்கு உள்ளதாக, கெரோசலில் ஒங் பாசாங்கு செய்தார்.
வாடிக்கையாளர்கள் அவற்றுக்கான முழுத்தொகையை முன்கூட்டியே செலுத்தவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஏறத்தாழ $148,000 இழந்த 128 பேர் சம்பந்தப்பட்ட மோசடியில், அவர் $3,400 மட்டுமே திருப்பிக் கொடுத்திருந்தார்.
ஓங்கிற்கு சூதாட்டப் பழக்கம் இருந்ததாகவும் நடந்தது குறித்து அவர் வருத்தம் தெரிவிப்பதாகவும் அவரது வழக்கறிஞர் கூறினார்.
ஒங் $20,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் அடுத்த மாதம் 20ஆம் தேதி, தமது சிறைத் தண்டனையைத் தொடங்க அரசு நீதிமன்றத்தில் சரணடையவேண்டும்.

