அரசாங்கம் இவ்வாண்டு தகவல்தொடர்புத் தொழில்நுட்பத்தில் $3.3 பில்லியன் செலவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பு (கவ்டெக்) கூறியது.
இந்த 3.3 பில்லியன் வெள்ளியில் கிட்டத்தட்ட 2.5 பில்லியன் வெள்ளி, மொத்த ஒப்பந்தப்புள்ளி கள் மூலம் வழங்கப்படும் தகவல்தொடர்புத் தொழில்நுட்பத் திட்டங்களுக்குச் செல்லும்
இந்த ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள செலவினங்களில் ஏறக்குறைய $1 பில்லியன் அரசாங்கத்தின் வணிக ரீதியான 'கிளவுட்' தள உருவாக்கத்திற்குச் செல்லும். இது வணிக ரீதியான கிளவுட் தீர்வுகளை அரசு நிறுவனங்கள் செயல்படுத்த அனுமதிக்கும் தளமாகும்.
கடந்த 2021லும், 2022லும் முன்னுரைக்கப்பட்ட ஆண்டுக்கு $3.8 பில்லியன் வெள்ளி ஆண்டுச் செலவினத்தைக் காட்டிலும் அது குறைவு. கடந்த ஐந்தாண்டுகளில் அரசாங்கம் தகவல்தொடர்புத் தொழில்நுட்பத்தில் கிட்டத்தட்ட $16 பில்லியன் முதலீடு செய்துள்ளது.
தகவல்தொடர்புத் தொழில்நுட்பத்தில் இவ்வாண்டு அரசாங்கச் செலவினத்தின் ஒரு பகுதியாக அரசாங்கச் சேவையில் 100,000க்கும் மேற்பட்ட கணினிகளும் பிரிண்டர்களும் இவ்வாண்டு மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூவாண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படும் அத்தகைய சாதனங்களுக்குக் கிட்டத்தட்ட $400 மில்லியன் செலவிடப்படும் என்று கவ்டெக் நேற்று கூறியது.
தனிப் பயன்பாட்டுக்கான கணினிகளையும் பிரிண்டர்களையும் மாற்றும் நடவடிக்கைக்கு விநியோகிப்பாளர்கள் தகுந்த சுற்றுப்புற, எரிசக்தித் தரங்களைப் பூர்த்திசெய்ய வேண்டும். அது, இவ்வாண்டு இடம்பெறும் மூன்று பெரியளவிலான முக்கிய ஒப்பந்தப்புள்ளிகளில் ஒன்று.
இரண்டாவது, வாடிக்கையாளர் தொடர்பு நிர்வாகம், சம்பவ நிர்வாகம், மென்பொருள் செயலிகளை உருவாக்குவதற்குத் தேவையான குறியாக்கத்தைக் குறைக்கும் தளங்கள் ஆகியவற்றுக்கு அரசாங்க அமைப்புகளுக்கு சந்தா அடிப்படையிலான மென்பொருளை வழங்குவதற்கான $600 மில்லியன் ஏலக் குத்தகை.
மூன்றாவது, அமைப்புகள் பயன்படுத்தக்கூடிய கணினித் தொழில்நுட்பச் சேவைகளுக்கான $850 மில்லியன் ஒப்பந்தப்புள்ளியாகும்.

