சட்டவிரோத குதிரைப் பந்தயப் பிடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நான்கு பெண்கள் உட்பட மொத்தம் 89 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
தீவு முழுதும் 10 நாள்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில், புக்கிட் பாத்தோக், பியோ கிரசண்ட், புக்கிட் மேரா, சைனாடவுன் போன்ற பகுதிகளில் அவர்கள் பிடிபட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அவர்கள் 38க்கும் 84 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
கணக்காளர்களாவும் உதவியாளர்களாகவும் பந்தயம் கட்டுபவர்களாகவும் சட்டவிரோதமாக அவர்கள் செயல்பட்டதாக நம்பப்படுவதாக முதற்கட்ட விசாரணைகள் காட்டின. காவல்துறையினர் $64,000க்கும் அதிகமான ரொக்கம், கைப்பேசிகள், குதிரைப் பந்தயப் பிடிப்புக் கருவிகள் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.
சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு $500,000 வரை அபராதம், ஏழாண்டு வரை சிறையும் விதிக்கப்படலாம்.
சட்டவிரோத சூதாட்டத்தில் பந்தயம் கட்டுவோருக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டால் $10,000 வரை அபராதம், ஆறு மாதம் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

