போக்குவரத்துக் குற்றங்கள் எனக் கூறி அபராதம் கட்டச் சொல்லும் புதுவித மோசடியை காவல்துறை கண்டுபிடித்துள்ளது. இதன்படி, ஒருவர் போக்குவரத்துக் குற்றம் புரிந்துள்ளதாகவும் அதற்கேற்ப அவர் அபராதம் கட்ட வேண்டியுள்ளதாகவும் அந்த நபருக்கு குறுந்தகவல் கிடைக்கும். அதைக் கட்டத் தவறினால் அவர் கூடுதல் அபராதம் கட்ட வேண்டியிருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும்.
இதிலுள்ள ஒரு தொடர்பின் மூலம் அந்த நபர் ஒரு போலியான இணையத்தளத்திற்கு இட்டுச் செல்லப்பட்டு அங்கு அபராதம் கட்டும்படி கூறப்படுவார்.
மேலும் அவரது வங்கிக் கணக்கு குறித்த விவரங்கள், அவருடைய பாதுகாப்பு குறியீடு, ஒரு முறை பயன்படுத்தப்படும் மறைச்சொல் ஆகியவற்றை அந்த இணையத்தளம் கேட்கும்.
இந்த மோசடி குறித்த காவல்துறை அறிவுரையில், ஒருவர் உண்மையிலேயே போக்கு
வரத்து குற்றம் புரிந்திருந்தால், அவரைப் போக்குவரத்து காவல் துறை தொடர்புகொண்டு குற்றம் புரிந்த ஓட்டுநரின் விவரங்களை முதலில் கேட்கும் என்று கூறியது. பின்னர் குற்றம் புரிந்ததாகக் கூறி அந்த ஓட்டுநருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.
இதில் மின்னிலக்க முறையில் காவல் துறையினர் நோட்டீஸ் அனுப்புவதில்லை என்பதை காவல் துறை தெளிவுபடுத்தியுள்ளது.
மோசடிகளைத் தடுப்பதாகக் கூறி 'ஸ்கேம்ஷீல்ட்' எனப்படும் போலி மோசடித் தடுப்பு செயலி பற்றி பொதுமக்களுக்கு காவல் துறை சென்ற வாரம் எச்சரிக்கை விடுத்த பின் தற்பொழுது இந்த அறிவுரையை வெளியிட்டுள்ளது. அந்தப் போலி செயலியை பதிவிறக்கம் செய்தால், அது ஒரு
வரின் கைப்பேசியில் ஊடுருவி அதிலிருக்கும் தகவல்களை மோசடிக்காரர்கள் பயன்படுத்தக்கூடும் என்று காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளது.
இதன் தொடர்பில் பொதுமக்கள் சந்தேகத்திற்குரிய எந்தச் செயலியையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
மோசடி அறிகுறிகள் தெரிய வந்தால் பொதுமக்கள் www.scamalert.sg என்ற இணையத்தளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம் அல்லது 1800-772-6688 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம்.

