அனுஷா செல்வமணி
பொதுவாக புற்றுநோயாளிகள் சிகிச்சை மேற்கொண்ட பிறகு அவர்களின் எலும்புகள் பலவீனமாகும் நிலையில் அவர்களுக்கு 'ஸொலேட்ரோனிக் ஆசிட்' எனப்படும் மருந்து அளிக்கப்படுகிறது. இந்த மருந்து, புற்றுநோயாளிகளுக்கு நோய் பரவலைத் தவிர்க்கவும் எலும்புகளை வலுப்படுத்தவும் உதவும்.
இதற்கு முன்னர் நோயாளிகள் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகப் புற்றுநோய் கழகத்துக்குச் சென்றுதான் இந்த மருந்தைத் தங்களின் நரம்பு வழியாக ரத்தத்தினுள் செலுத்த வேண்டியிருந்தது. கழகத்திலிருந்து தொலைவில் வசிக்கும் நோயாளிகளுக்கு இனி அந்தக் கவலை வேண்டாம்.
புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில், மருத்துவர்களும் தாதியரும் நோயாளிகளின் புற்றுநோய் தீவிரத்தை அறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சையை அளிக்க முற்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து, சிங்கப்பூரில் இருக்கும் இரண்டு முன்னணி புற்றுநோய் சிகிச்சை நிலையங்களில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகப் புற்றுநோய் கழகமும் ஒன்று.
2017ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகப் புற்றுநோய் கழகம், 'என்சிஐஎஸ் ஒன் தி கோ' எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தற்போது மேற்கு வட்டாரத்தில் இருக்கும் மூன்று மருந்தகங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் பயனாக நோயாளிகள் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகப் புற்றுநோய் கழகத்துக்கு அப்பாற்பட்டு, நேரத்தையும், செலவையும் மிச்சப்படுத்தும் விதத்தில் தங்கள் வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் மருந்தகத்திலேயே சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
திட்டத்தின்கீழ் செயல்படும் ஜூரோங் மருத்துவ நிலையத்தில் தொடங்கி, இனி நோயாளிகள் கியட் ஹொங் ஒருங்கிணைந்த தனியார் பொது மருந்தகத்திலும் கிளமெண்டியில் உள்ள ஃபிரண்டியர் ஒருங்கிணைந்த தனியார் பொது மருந்தகத்திலும் இனி இந்த சேவையைப் பெறலாம்.
19 புற்றுநோய் சிகிச்சைகள், மூன்று மருத்துவ நடைமுறைகள், 49 ரத்தப் பரிசோதனைகள் ஆகியவை இந்தத் திட்டம் மூலம் புற்றுநோயாளிகளுக்கு மருந்தகங்களில் வழங்கப்பட்டு வருகிறது.
சேவை மூலம் பயன் கண்ட நோயாளிகளில் ஒருவரான 57 வயது இஃபத் அரா நூர்ஜஹான், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாம் கட்ட மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.
மீண்டும் புற்றுநோய் அவரைத் தாக்காமல் இருக்க இவர் சிகிச்சைப் பெற்று வருகிறார். தனது எலும்புகளை வலுப்படுத்துவதற்கு இஃபத், 'ஸொலேட்ரோனிக் ஆசிட்' மருந்தை முன்பு சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகப் புற்றுநோய் கழகத்துக்குச் சென்று எடுக்க வேண்டியதாக இருந்தது.
கூ டெக் புவாட் மருத்துவமனையில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரியும் இவர், "நான் உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் வசிக்கிறேன். இதற்கு முன்பு சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகப் புற்றுநோய் கழகத்துக்குச் செல்ல நான் ஒரு மணி நேரமாவது பயணம் செய்ய வேண்டும். இப்பொழுது ஜூரோங் மருத்துவ நிலையத்திற்கு வருகிறேன். இங்கு நான் காத்திருக்கத் தேவையில்லை. இந்தச் சேவை இதர இரண்டு மருந்தகங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படுவதால் எனக்கு வசதியாக உள்ளது." என்றார்.

