கிளார்க் கீ பகுதியில் இருக்கும் செண்ட்ரல் மால் கடைத்தொகுயில் உள்ள மூன்று உணவுக்கடைகளை இரண்டு வாரங்களுக்குத் தற்காலிகமாக மூட சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தரவிட்டுள்ளது. சுத்தமில்லாமல் இருந்த காரணங்களுக்காக அந்தக் கடை உரிமையாளர்கள் தண்டிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
செண்ட்ரல் மால் காபி ஹவூஸ், ஆய்ஸ்டர் கோ, சூஷி உணவுக்கடைகளின் உரிமம் ஜூன் 7ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.
உணவுக் கடைகள் கடந்த 12 மாதங்களில் மட்டும் 12 குற்றப் புள்ளிகளைப் பெற்றிருந்ததாக உணவு அமைப்பின் அறிக்கை குறிப்பிட்டிருந்தது. மேலும் உணவுக் கடைகளுக்கு மொத்தமாக 800 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.
கூடுதலாக அக்கடைகளில் உணவைக் கையாளுபவர்கள் ஊழியரணி திறன் தகுதியில் உள்ள உணவுப் பாதுகாப்பு பாடத்தின் முதல் நிலையை மீண்டும் கற்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதை செய்யாமல் அவர்கள் வேலைக்கு திரும்பக்கூடாது.
பொதுச் சுகாதார சட்டத்தை மீறுபவர்கள் மீது எவ்வித தயக்கமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவுக் கடைகளும் அதன் ஊழியர்களும் உணவு, சுத்தம் தொடர்பான விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் உணவைக் கையாளுபவர்கள் தகுந்த உரிமம் வைத்திருக்க வேண்டும் என்றும் சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.
உணவுக் கடைகளில் தூய்மைக் குறைபாடு இருப்பதைக் கண்டால் https://www.sfa.gov.sg/feedback என்ற இணையப்பக்கம் மூலமோ 6805-2871 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைத்து சிங்கப்பூர் உணவு அமைப்பிடம் பொதுமக்கள் தகவல் கொடுக்கலாம்.