சாங்கி விமான நிலையத்தின் மூன்றாம் முனையத்தில் செயல்படும் ‘மைண்ட்சாம்ப்ஸ்’ பாலர்பள்ளியில் 28 மாணவர்களும் நான்கு ஊழியர்களும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் புலன்விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு மே மாதம் 17ஆம் தேதிக்கும் கடந்த திங்கட்கிழமைக்கும் இடையே வயிற்றுப்போக்கு அறிகுறிகள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
யாரும் மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை என்று சிங்கப்பூர் உணவு முகவை, சுகாதார அமைச்சு, பாலர் பருவ மேம்பாட்டு முகவை ஆகியவை அறிக்கையில் தெரிவித்தன.
உணவு பாதுகாப்பு என்பது கூட்டு பொறுப்பு.
சிங்கப்பூர் உணவு முகவை விதிமுறைகளை அமல்படுத்தி வருகின்ற அதே நேரத்தில், உணவு தயாரிப்பாளர்களும் விநியோகிப்பாளர்களும் துப்புரவான நடைமுறைகளையும் பழக்கவழக்கங்களையும் பின்பற்றி அவற்றின் மூலம் தங்கள் பங்கை ஆற்றவேண்டும் என்பதை அந்த அமைப்புகள் சுட்டிக்காட்டின.