மோனலிசா
நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டோரின் நலன்கருதி முதல்முறையாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் சமூக இடப்பரப்பில் தனியார் சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு நிலையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
'டையாவிரும்' எனும் தனியார் சுகாதாரப் பராமரிப்பு நிறுவனத்தின் இந்த ரத்த சுத்திகரிப்பு நிலையம், ஃபாஜார் சாலையில் புளோக் 452 கீழுள்ள வெற்றுத் தளத்தில் அமைந்துள்ளது.
"சிறுநீரகச் செயலிழப்பினால் பாதிப்படைந்தவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் வாரத்தில் மூன்று முறை மேற்கொள்ள வேண்டிய ரத்த சுத்திகரிப்பு சிகிச்சையை இந்த நிலையத்தில் பெறலாம். ஒவ்வொரு முறையும் சிகிச்சை ஏறத்தாழ நான்கு மணி நேரம் நீடிக்கும் என்பதால் வீவக புளோக்கின் கீழ் இந்த நிலையம் அமைந்துள்ளது நோயாளிகளுக்கு வசதியாக இருக்கும்," என்று கூறினார் சிகிச்சை நிலையத்தில் தாதியாகப் பணிபுரியும் ரேணுகா பாலசுப்ரமணியம், 34.
தம்முடைய ஒரு சிறுநீரகம் செயலிழந்ததன் காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக டையாவிரும் நிறுவனத்தில் ரத்த சுத்திகரிப்பு மேற்கொண்டு வரும் முகமது ஜாஃபர், 70, "வீவக புளோக்கின் கீழ் இதுபோன்ற சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் அதிகம் உருவாக்கப்பட்டால் என்னைப் போன்ற முதிய நோயாளிகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும்," என்று கூறினார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையத்தின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹுவா, "சிங்கப்பூரின் ஆரோக்கியமான சமூக மேம்பாட்டைப் பொதுமக்கள் எளிமையாக அணுக வசதியாக உள்ள இதுபோன்ற சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களின் பங்கு மகத்தானது," என்றார்.
ஒரே சமயத்தில் 13 நோயாளிகள்வரை நிலையத்தில் சிகிச்சை பெறலாம். நிலையம் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்.

