இளையோருக்காக இளையோரின் சிந்தனையால் உருவான அறிவியல் நிலையக் கண்காட்சி ஜூன் பள்ளி விடுமுறைக் காலத்தில் தொடங்கியுள்ளது.
அந்தக் கண்காட்சி வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து கவனத்தை ஈர்க்கக்கூடிய, இருவழித் தொடர்பு அனுபவமாக அமைகிறது.
அறிவார்ந்த தேச, மின்னிலக்க அரசாங்கக் குழுமமும் சிங்கப்பூர் அறிவியல் நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள அந்த நிரந்தரக் கண்காட்சியை தொடர்பு, தகவல் அமைச்சரும், அறிவார்ந்த தேச, இணையப் பாதுகாப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திருவாட்டி ஜோசஃபின் டியோ நேற்று திறந்துவைத்தார்.
அறிவியல் நிலையத்தில் அமைந்துள்ள அந்தக் கண்காட்சி 10 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுள்ள இளம் சிங்கப்பூரர்களுக்கு ஊக்கமளிக்க, தொழில்நுட்ப முறைகளை எளிமைப்படுத்துகிறது.
அவர்கள் எதிர்கால தொழில்நுட்பங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள அது வழிவகுக்கிறது.
கண்காட்சி, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான பிணைப்பை வளர்த்து, புதிய தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தக்கூடிய சாத்தியங்கள் பற்றி சமூகத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த நோக்கம் கொண்டுள்ளது.
அந்தக் கண்காட்சியில் அறிவியல் ரீதியான முறைகளை எளிதாக விளக்கும் எட்டுப் பகுதிகள் உள்ளன.
கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய திருவாட்டி டியோ, தொழில்நுட்ப முறைகள் எளிதில் எட்டக்கூடியவையாகவும் புரிந்துகொள்ளக் கூடியவையாகவும் அமைய வேண்டும் என்று அறிவார்ந்த தேச, மின்னிலக்க அரசாங்கக் குழுமம் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
கடந்த ஆண்டு கண்காட்சியின் தொடக்கக் கட்டங்களில் வெவ்வேறு சமூகக் குழுக்களிடமிருந்து கருத்துகள் திரட்டப்பட்டன.
சங்காட் சாங்கி உயர்நிலைப் பள்ளியிலிருந்து கிட்டத்தட்ட 40 மாணவர்கள் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற கலந்துரையாடல்களில் பங்கேற்றனர்.
மேம்பாடுகளுக்கான சிந்தனைகளையும் கருத்துகளையும் அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
கண்காட்சி நேற்று முதல் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது. சிங்கப்பூர் அறிவியல் நிலையத்திற்கான பொது நுழைவுச்சீட்டைக் கொண்டு கண்காட்சிக்குச் செல்லலாம்.

